எஸ்.ஹமீத்-
மலேசியாவின் பிரதமர் நஜீப் துன் ரசாக் இந்திய நடிகர் ரஜினிகாந்தை இன்று ரஜினிகாந்தின் வீடு தேடிப் போய்ச் சந்தித்துள்ளார். இந்த விடயம் இந்தியாவிலும் மலேசியாவிலும் மிக்க பரபரப்பான செய்தியாக நோக்கப்படுகிறது.
மலேசிய நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையான சுமார் 3 கோடி பேர்களில் தமிழர்களின் எண்ணிக்கை சுமார் 20 இலட்சமாகும். இந்த 20 இலட்சம் தமிழர்களுக்கிருக்கும் கணிசமான வாக்குகளைத் தனது பக்கம் திருப்பலாமென்ற எண்ணத்தில் மலேஷியப் பிரதமர் நஜீப் துன் ரசாக் இந்தியாவின் பிரபல நடிகர் ரஜினிகாந்த்தைத் தனது குடும்பத்தினருடன் சென்று சந்தித்துள்ளாரெனக் கூறப்படுகிறது.
222 உறுப்பினர்களை கொண்ட மலேசிய நாடாளுமன்றம் மக்களவை மற்றும் மேலவை ஆகிய இரு அவைகளைக் கொண்டதாகும். மலேசிய நாட்டு பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் நடத்தப்பட வேண்டும்.
கடந்த 2009-ம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தேமு–அம்னோ கட்சி அங்கு ஆட்சி அமைத்தது. அந்நாட்டின் பிரதமராக பதவி வகித்துவரும் நஜீப் துன் ரசாக் மீது சமீபகாலமாக ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, அரசு நிதிக்காக அந்நாட்டின் மத்திய வங்கி ஒதுக்கீடு செய்த நூறு கோடி அமெரிக்க டாலர்கள் பிரதமர் ரசாக்கின் தனிப்பட்ட வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்பட்டதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த குற்றச்சாட்டை பிரதமர் நஜீப் ரசாக் தொடர்ந்து மறுத்து வருகிறார். இதுதொடர்பான எந்த விசாரணைக்கும் தன்னை உட்படுத்திக் கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த விவகாரம் மலேசிய மக்களில் சிலரது மனங்களில் நஜீப் ரசாக் மீது வெறுப்பை ஏற்படுத்தி விட்டிருப்பதாக பிரபல ஊடகங்கள் பதிவு செய்து வருகின்றன. இதனால், தனது செல்வாக்கு நிறையவே கீழிறங்கிவிட்டதை உணர்ந்து கொண்டிருக்கும் பிரதமர் நஜீப் ரசாக் அந்தச் செல்வாக்கை மீண்டும் அடைய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த நடவடிக்கைகளில் ஒன்றுதான் அவர் இன்று சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டில் போய்ச் சந்தித்த நிகழ்வாகுமென அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.