ஐ. ஏ. காதிர் கான்-
மினுவாங்கொடை - கல்லொழுவை, அல் - நிழாமிய்யாஹ் அரபுக் கல்லூரியில், இதுவரை அல் - ஹாபிழ் மற்றும் அல் - ஆலிம் பட்டங்களைச் சூட்டிக்கொண்டு சான்றிதழ்கள் பெற்றவர்களுக்கான மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வு, (24) ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 3 மணி வரை, கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
இச்சிறப்பு நிகழ்வில், அகில இலங்கை ஜம் - இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டத் தலைவரும், ஜம் - இய்யாவின் பிரச்சாரக் குழுச் செயலாளருமான அஷ்ஷெய்க் உமர்தீன் (ரஹ்மானி), "உலமாக்களின் சிறப்பும் கடமைகளும்" எனும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவாற்றினார்.
கடந்த 35 வருட காலமாக நிழாமிய்யாஹ்வின் தலைவராக இயங்கும் மற்றும் இக்கல்லூரியின் முன்னேற்றத்திற்காக தமது காணியை வக்பு செய்த பெருந்தகையுமான அல் - ஹாஜ் ஏ. எச். எம் முனாஸ், இச்சிறப்பு நிகழ்வின்போது நிழாமிய்யாஹ்வின் பழைய மாணவர் சங்கம் சார்பில், கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் எம். நிஜாமுத்தீன் (பஹ்ஜி) யினால் பொன்னாடை அணிவித்தும், உப அதிபர் அஷ்ஷெய்க் எம். ஜெஸ்மின் (தீனி) யினால் ஞாபக சின்னம் வழங்கியும் கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வுக்கு, நிழாமிய்யாஹ் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் வகுப்புக்களுக்காக இணைந்து கொண்ட பெரும்பாலான மாணவர்கள் பலரும், சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். இதில் ஐந்து பழைய மாணவர்கள், தமது கல்லூரியின் கடந்த கால அனுபவங்கள் குறித்தும், இங்கு வந்திருந்த சபையோரிடம் முன்வைத்தனர்.
1985 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, மிகச்சிறப்பாக இயங்கி வரும் நிழாமிய்யாஹ் அரபிக் கல்லூரி, இதுவரை 127 ஆலிம்களையும், 103 ஹாபிழ்களையும் உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.