சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்றக் கோரிக்கையினை முன்வைத்து, இன்று சிலர் அரசியல் வியாபாரம் செய்ய முனைந்துள்ளனர். இதனை அறியாமல் பள்ளிவாசல் சமூகம் அதன் பின்னால் செல்வதை நாம் அனுமதிக்கமாட்டோம். சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்ற கோரிக்கை தேர்தல் காலத்தில் மட்டும் பயன்படுத்தப்படும் கோரிக்கையாகவே இன்று காணப்படுகின்றது. இக்கோரிக்கையினை மக்கள் மத்தியில் உணர்வு பூர்வமாக கொண்டு சென்று வீரியப்படுத்தியது நானே என்று கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் தேசிய தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேதமதாசவினை ஆதரித்து சாய்ந்ததமருதில் (13) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அங்கு அவர் உரையாற்றுகையில்,
எமது மக்களை பிரித்து வாழ வைக்க சில அரசியல்வாதிகள் நினைத்து செயற்படுகின்றனர். இந்தத் தேர்தல் சாந்தமருதுக்கான உள்ளுராட்சி மன்ற கோரிக்கைக்கான தேர்தல் அல்ல என்பதை எமது சாய்ந்தமருது மக்கள் மிகத் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். இத்தேர்தல் எமது சிறுபான்மை மக்களை நின்மதியாக இந்த நாட்டில் வாழ வைக்கின்ற தேர்தலாகும். அதனை பள்ளிவாசல் நிருவாகம் புரிந்துகொள்ளவேண்டும். எமது உள்ளுராட்சி மன்றத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைமை நிச்சயமாக வென்று தருவார் என்பதை நான் உறுதியாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
எமது நாட்டை மியன்மாரைப் போன்று கொண்டுவர நாம் ஒருபோதும் இடமளிக்கக் கூடாது. அதற்கு ஆதரவாக எமது சாந்தமருது மக்கள் யாரும் துணை போய் விடக்கூடாது என்பதை நான் உங்களிடம் மிக வினயமாக கேட்டுக்கொள்கின்றேன். எமது நாடு ஒரு மியன்மாரைப்போன்று வந்தால் அதில் எமக்கு சபை கிடைத்தால் என்ன? கிடைக்காவிட்டால் என்ன? இவை இரண்டும் ஒன்றேதான். அதற்குப் பிறகு நாம் யோசித்து ஒரு பிரயோசனமும் கிடைக்கப் போவதில்லை.
ஜனாதிபதி தேர்தல் முடிந்த கையோடு கட்சியின் தலைவர் அமைச்சர் றிசாட் பதியுத்தீனின் வழிகாட்டலில் சாய்ந்தமருதுக்கான சபையை வெற்றிகொள்வதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் றிஷாட் முன்னெடுப்பார். அத்தோடு எமது பிரதேசத்துக்கான அபிவிருத்தி வேலைத் திட்டங்களையும், பெண்களுக்கான வாழ்வாதார திட்டத்தினையும் ஆரம்பித்து வைப்பதற்கான சகல முன்னெடுப்புக்களையும் முன்னெடுக்கவுள்ளோம் இதில் யாரினதும் தலையீடு இருக்காது என்றார்.