முசலி நில மீட்பு செயற்திட்டம் - வடக்கு முஸ்லிம் சிவில் சமூகத்தின் பகிரங்க அழைப்பு

2014ம் ஆண்டு முதல் வில்பத்து சரணாலயத்தின் எல்லைக் கிராமங்களான மறிச்சுக்கட்டி, பாலைக்குளி, கரடிக்குளி போன்ற முஸ்லிம் கிராமங்கள் வில்பத்து வனப்பிரதேச எல்லைகளுக்குள் இருக்கின்றன என்ற ஒரு கருத்து ஒரு சிலரால் பரவலாக முன்வைக்கப்படமை யாவரும் அறிந்த விடயமே, இதற்காக மக்கள் போராட்டங்களை நடாத்தியதும், அரசியல் தலைவர்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்தி நின்றதும் யாவரும் அறிந்த விடயங்களே; இப்போது குறித்த பிரச்சினை அதன் உச்ச எல்லையை அடைந்திருப்பதாகவே வடக்கு முஸ்லிம் சிவில் சமூகத்தினர் கருதுகின்றார்கள். இவ்விடயம் அரசியலுக்கு அப்பால் சிவில் சமூக மட்டத்தில் கலந்துரையாடப்பட்டு தீர்வுகள் முன்வைக்கப்படவேண்டும் என்ற கருத்தையும் நாம் நீண்டநாட்களாக முன்வைத்துவருகின்றோம். 

மேற்படி விடயத்தை ஒரு சில கிராமங்களோடு மட்டுப்படுத்தப்பட்ட பிரச்சினையாக மாத்திரம் நாம் நோக்கவில்லை; முசலி பிரதேசத்தின் ஒட்டுமொத்த நிலத்தையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கின்ற செயற்திட்டமொன்று அரச அனுசரணையோடு திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வருவதை நாம் அறிவோம்; இன மத பேதமற்று ஒட்டு மொத்த முசலியையும் பாதுகாக்கின்ற ஒரு செயற்திட்டத்தையே வடக்கு முஸ்லிம் சிவில் சமூகத்தினர் பரிந்துரை செய்கின்றனர்.

முசலி பிரதேசம் மாத்திரமே வடக்கு மாகாணத்தின் ஒரேயொரு முஸ்லிம் பெரும்பான்மை பிரதேசம் என்பதை நாம் முதலில் அறிந்திருக்கவேண்டும், இப்பிரதேசத்திலே வாழ்ந்த மக்கள் அங்கு வாழ்ந்த கிறிஸ்த்தவ மக்களோடும், இந்துக்களோடும், சிறு அளவிலான பௌத்த மக்களோடும் அந்நியோன்யமாகவே வாழ்ந்து வந்தார்கள். ஆனாலும் 2009 யுத்த முடிவிற்குப் பின்னரான சூழ்நிலையில் இப்பிரதேச நிலங்களை அபகரிக்கும் ஒரு முயற்சி முடுக்கிவிடப்பட்டுள்ளது; இத்திட்டங்களுக்கு இலங்கை அரசாங்கமும் உதவுகின்றது என்ற உண்மையை தற்போது இந்த நிலத்தின் மக்கள் உணரத் தொடங்கியிருக்கின்றர்கள்.

·முள்ளிக்குளம் கிறிஸ்தவக் கிராமத்தினை கடற்படையினர் ஆக்கிரமித்திருக்கின்றார்கள்

·சிலாவத்துறை முஸ்லிம் கிராமத்தினை கடற்படையினர் ஆகிரமித்திருக்கின்றார்கள்.

·அல்லிராணிக் கோட்டை அமைந்திருக்கின்ற பிரதேசங்களை தொல்பொருள் திணைக்களம் எல்லையிட்டிருக்கின்றது.

·கல்லாற்றின் மணற்படுக்கைப் பிரதேசங்களை கடற்படையினர் ஆக்கிரமித்திருக்கின்றார்கள்

·மறிச்சுக்கட்டி, பாலைக்குளி, கரடிக்குளி பிரதேசங்களை வனபரிபாலனத் திணைக்களம் தம்முடைய எல்லைப் பிரதேசங்களாக அடையாளப்படுத்தியிருக்கின்றார்கள்.

·பூர்வீகமாக முசலிப் பிரதேசத்தில் வாழாத 1000ற்கும் அதிகமான சிங்களக் குடும்பங்களைக் குடியேற்றுவதற்கான காணிகள் இப்பிரதேசங்களிலே அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

·அரிப்பு முதல் மறிச்சுக்கட்டி வரையிலான கரையோரப் பிரதேசங்களிலே வெளிமாவட்ட மீனவர்களுக்கான தளங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

·இன்னும் ஏராளமான தனியார்க் காணிகள் பல்வேறு அரச திணைக்களங்கள், மற்றும் தனியாரினால் எல்லையிடப்பட்டுள்ளன.

இவ்வாறாக முசலிப் பிரதேசத்தின் காணிகளையும் இயற்கை வளங்களையும் திட்டமிட்ட அடிப்படையில் அபகரிப்பதற்கான ஒரு பாரிய நிகழ்ச்த்திட்டம் திட்டமிட்ட அடிப்படையிலே முன்னெடுக்கப்படுகின்றது.

எனவே முசலியின் ஒட்டுமொத்த நிலங்களையும் பாதுகாக்கும் நோக்கில் 1990களிலே முசலிப் பிரதேசம் கொண்டிருந்த எல்லைகளை அதே அமைப்பில் பேணுவதற்கும், அரச காணிகளைக் கையாள்வதிலே உள்ளூர் மக்களின் கருத்துக்கள் அறியப்பட்டே அவை நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும் என்ற அடிப்படையான கொள்கையின் கீழ் “முசலி நில மீட்பு செயற்திட்டம்” ஒன்றினை வடக்கு முஸ்லிம் சிவில் சமூகம் முன்மொழிகின்றது.

இச்செயற்திட்டத்தினை வன்னி மாவட்ட அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்கள், மன்னார் மாவட்ட வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள், முசலி பிரதேச உள்ளூர் அரசியல் பிரதிநிதிகள், முன்னைய நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்து, கிறிஸ்த்தவ, இஸ்லாமிய மதகுருமார்கள், முசலிப் பிரதேசத்தின் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மற்றும் இவ்விவகாரத்தில் ஆர்வமுள்ள மாகாண, தேசிய மட்டத்திலான சமூகச் செயற்பாட்டாளர்களையும் இணைத்து முன்னெடுக்கப்படல் அவசியமாகும் என்ற நிலைப்பாட்டினையும் நாம் முன்வைக்கின்றோம். அத்தோடு இவ்விவகாரமானது முஸ்லிம் மக்களின் விவகாரமாக அடையாளப்படுத்தப்படுவதை விடவும் முசலிப் பிரதேச மக்களின் பொதுவான நிலப் பிரச்சினையாக அடையாளப்படுத்தப்படுவதையும் நாம் வலியுறுத்துகின்றோம்.

அதுமாத்திரமன்றி வழமை போன்று உணர்ச்சி அரசியலுக்குள் அகப்பட்டு இவ்விடயத்தை முஸ்லிம் இனவாததினைக் கூர்மையடையச் செய்யும் ஒரு அம்சமாக கையாளாமல்; அறிவுபூர்வமாக, இலங்கையின் சட்டப் பொறிமுறைகளுக்கூடாக, இராஜதந்திர நகர்வுகளினூடாக கையாண்டு மக்களின் நலன்களின் அடிப்படையில் ஒரு நீதமான உரிய தீர்வைப் பெற்றுக்கொள்வதில் எல்லோரும் கவனம் செலுத்தவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றோம்.

மேற்படி விடயங்கள் குறித்து ஏற்கெனவே சர்வதேச கவனங்கள் பெறப்பட்டுள்ள நிலையில் எதிர்காலத்திலும் அவ்வாறான நகர்வுகள் தேவைக்கேற்ப முன்னெடுக்கப்படும் என்பதையும் இங்கு குறிப்பிடுகின்றோம். இது தொடர்பிலான ஆக்கபூர்வமான செயற்பாடுகளை கிட்டிய எதிர்காலத்தில் வடக்கு முஸ்லிம் சிவில் சமூகம் முன்னெடுக்கும் என்பதையும் இவ்வறிக்கையிலே தெரிவித்துக் கொள்கின்றோம்.
வடக்கு முஸ்லிம் சிவில் சமூகம்-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -