இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம் வெகுவிரைவில் ஆரம்பம் - எட்டப்பட்டது இறுதி இணக்கப்பாடு



ந்திய அரசின் நிதி பங்களிப்புடன் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் நிர்மாணிக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்டுத் திட்டம் வெகுவிரைவில் ஆரம்பமாகவுள்ளது. இதற்கான இறுதியான - உறுதியான இணக்கப்பாடு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று (15.12.2023) நடைபெற்ற சந்திப்பில் எட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய 10 ஆயிரம் வீட்டுத்திட்டத்தின் ஆரம்பக்கட்டமாக ஆயிரத்து 300 வீடுகளை அமைப்பதற்கான பணி இன்னும் ஓரிரு வாரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்திய அரசின் உதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்டு திட்டம் தொடர்பில் அனைத்து பங்குதாரர்களுக்கும் இடையிலான சந்திப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று (15.12.2023) நடைபெற்றது.

கொழும்பு, பத்தரமுல்லவில் உள்ள நீர்வழங்கல் அமைச்சில் நடைபெற்ற சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ராமேஷ்வரன், இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் சத்யன்ஜல் பாண்டே, நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் எஸ்.சமரதிவாகர, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, பெருந்தோட்ட கம்பனிகளின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள், முகாமைத்துவ பணிப்பாளர்கள், அரச பெருந்தோட்ட யாக்கங்களின் தலைவர்கள், இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள், தோட்ட உட்கட்டமைப்பின் அமைச்சின் மேலதிக செயலாளர் உட்பட அதிகாரிகள், பெருந்தோட்ட அமைச்சின் அதிகாரிகள், நிதி அமைச்சின் மேலதிக செயலாளர்கள், தேசிய வீடமைப்பு அதிகார சபை மற்றும் இலங்கை பொறியியலாளர் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகங்கள், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

வீடுகளை நிர்மாணிப்பதற்கான இடங்களை அடையாளம் காணும் பணி ஏற்கனவே நிறைவுபெற்றுள்ளது. காணி உரிமையை வழங்குவதற்கு பெருந்தோட்ட கம்பனி தரப்பிலும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, 10 பேர்ச்சஸ் காணி உரிமையுடன் - சகல உட்கட்டமைப்பு வசதிகளையும் உள்ளடக்கிய வகையில் குறித்த வீட்டு திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகை தந்திருந்தபோது மலையக மக்களுக்கான 10 ஆயிரம் வீட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டது. அப்போது ஒரு வீட்டுக்கு சுமார் 10 லட்சம் ரூபா மதிப்பிடப்பட்டது.

எனினும், கொரோனா பெருந்தொற்று, பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் வீட்டு திட்ட பணிகள் தாமதித்தன.

இந்நிலையில் தற்போதைய நிலைமையில் ஒரு வீட்டுக்கு சுமார் 28 லட்சம் ரூபா தேவைப்படுகின்றது. இது தொடர்பில் இந்திய அரசுடன் பேச்சு நடத்தி, அதற்கான அனுமதியையும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் பெற்றுக்கொடுத்துள்ளார்.


ஊடக செயலாளர்
நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :