ஜனாதிபதி சஜித் பிறேமதாஸ என்பதாக யாழ். முத்திரைச்சந்தி பகுதியில் காட்சிப்படுத்த்ப்பட்ட பதாதைகள் தேர்தல் சம்பந்தப்பட்ட சட்டத்தை மீறுகின்றன என்று குறிப்பிட்டு தேர்தல் ஆணைக்குழுவுக்கு தமிழர் ஊடக மையம் நேற்று வெள்ளிக்கிழமை எழுத்துமூலம் முறைப்பாடு செய்தது.
இது குறித்து தமிழர் ஊடக மையத்தின் தலைவர் தர்மேந்திரா விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளவை வருமாறு:-
நாம் சுதந்திர ஊடகவியலாளர்கள் என்கிற வகையில் நீதியும், நேர்மையுமான ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுவதை மிக நெருக்கமாக அவதானித்து வருகின்றோம். எமது அவதானத்துக்கு உட்பட்ட வகையில் ஏதேனும் தேர்தல் மீறல்கள் இடம்பெறுகின்ற பட்சத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினர்களின் மேலான கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரி இருக்கின்றோம்.
அந்த வகையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஐக்கிய தேசிய கட்சியின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான அமைப்பாளரும், இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரனின் ஏற்பாட்டில் யாழ். நல்லூர் முத்திரைச்சந்தி பகுதியில் அமைச்சர்கள், எம். பிகள் ஆகியோரின் பங்கேற்புடன் அன்னம் சின்னத்தில் போட்டியிடுகின்ற சஜித் பிரமதாஸவுக்கு ஆதரவான பிரசார கூட்டம் இடம்பெற்றது. இதில் அமைச்சர் சஜித் பிரமதாஸவும் பங்கேற்றார்.
இதையொட்டி வீதியோரங்களில் காட்சிப்படுத்தப்பட்ட பதாதைகளில் ஜனாதிபதி சஜித் பிரமதாஸ என்கிற வாசகம் காணப்பட்டது, இந்நாட்டின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவே இருக்கின்றார், இன்னமும் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவில்லை, புதிய ஜனாதிபதி இன்னமும் தெரிவு செய்யப்படவுமில்லை, சஜித் பிரமதாஸ ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவர் மாத்திரமே, ஒரு நாட்டுக்கு இரு ஜனாதிபதிகள் இருக்கவும் முடியாது,
எனவே ஜனாதிபதி சஜித் பிரமதாஸ என்கிற வாசகம் தேர்தல் சம்பந்தப்பட்ட சட்டத்தை அப்பட்டமாக மீறுகின்றது, எனவே இது சம்பந்தமாக ஆணைக்குழு உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டதுடன் இவ்வாறான சம்பவங்கள் எந்த தரப்பாலும் எதிர்காலத்தில் மேற்கொள்ளாமல் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டு உள்ளோம்.