சுதந்திரக்கட்சி மற்றும் மஹிந்த தலைமையிலான அரசை, வீழ்த்தவே முடியாது என்ற நிலையில் அதனை வீழ்த்துவதற்குரிய துரும்பாக இன்றைய ஜனாதிபதி மைத்திரி ஐதேகவினரால் பாவிக்கப்பட்டார்.
ஜனாதிபதி மைத்திரி உதவியிருக்காவிட்டால் ஐ தே கவால் முடிந்திருக்காது.
இவ்வாறு ஆட்சியை மிக கஷ்டப்பட்டு பொறுப்பேற்ற ரணில் தலைமையிலான ஐ தே க கிட்டத்தட்ட இந்த நான்கரை வருட காலத்துள் நாட்டு மக்களின் மனங்களை வெல்ல முடியாமல் போனது ஏன் என்பதை ஒவ்வொரு நடுநிலையாளனும் சிந்திக்க வேண்டும். ஆகக் குறைந்தது ஐ தே க அரசை கொண்டு வர 99 வீதம் வாக்களித்த முஸ்லிம் சமூகம் பெற்ற நன்மைகள் என்ன? நன்மைகள் பெறாவிட்டாலும் தீமைகளையாவது இந்த ரணில் சஜித் அரசு தடுத்ததா?
வரலாற்றில் மஹிந்தவின் ஆட்சியை கொண்டு வருவதில் முஸ்லிம்கள் பெருமளவு வாக்களிக்கவில்லை. கிழக்கில் முஸ்லிம்கள் வாழும் தொகுதிகளில் மஹிந்த வெல்லவில்லை. ஆகவே மஹிந்தவிடமிருந்து முஸ்லிம்கள் பெரிதாக எதிர் பார்க்க முடியாது. மஹிந்தவின் ஆட்சியில் வடக்கு கிழக்குக்கு வெளியே முஸ்லிம்கள் சில இன்னல்களை அனுபவித்தாலும் கிழக்கு முஸ்லிம்கள் முழு சுதந்திரத்தையும் அவ்வாட்சியில் அனுபவித்தார்கள். தமிழ் பேரினவாதம் கட்டுப்பாட்டில் இருந்தது. இருந்தும் முஸ்லிம்கள் நன்றியுடன் நடந்து கொண்டார்களா?
2010 ஜனாதிபதி தேர்தலிலும் பொதுத்தேர்தலிலும் உலமா கட்சி சொன்னது போல்
கிழக்கு முஸ்லிம்கள் மஹிந்தவுக்கு பெருமளவு வாக்களித்திருந்தால் கல்முனை தேர்தல் மாவட்டம் போன்றவற்றை இலகுவாக பெற்றிருக்கலாம்.
2015ல் ஆட்சி மாறிய போது
ரணில் மற்றும் சஜித் ஆட்சியில் மிக இலகுவாக நாட்டை கட்டியெழுப்பியிருக்கலாம். நாட்டில் யுத்தம் இல்லை. பாதாள உலகம் இல்லை. இரண்டு பெரும் கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு சிறிய சிறுபான்மை கட்சியே எதிர்க்கட்சியாக இருந்த நிலையில் எதையும் சாதித்திருக்கலாம். இவ்வாறு ஏதும் நடந்ததா?
சரி முஸ்லிம்களுக்கு நன்மை செய்யாவிட்டாலும் மாயக்கல்லி சிலை, கின்தோட்டை கலவரம், அம்பாரை பள்ளி உடைப்பு, கண்டி தாக்குதல், பல கடைகள் மின்சார ஒழுக்கு தாக்குதல் என்பன போன்றவற்றையாவது தடுத்திருக்கலாம். ஆட்சியின் கையாலாகா தனத்தின் போது அவற்றை மறைக்க ரணில், சஜித் அரசால் கலவரங்கள் மூட்டப்பட்டன என்பதை புத்தியுள்ள எவரும் மறுக்க முடியுமா?
யுத்தம் முடிவுற்ற பின் சிங்கள முஸ்லிம் முறுகல் இருந்தது. ஆனால் ரணில், சஜித் பிரேமதாச ஆட்சியில் தமிழ் பேரினவாதமும் முஸ்லிம்களுக்கெதிராக தாண்டவமாடிய போது அதனை தடுக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. முஸ்லிம்களுக்கெதிராக பேசிய முன்னாள் விடுதலைப்புலிகளோ சத்தியோ கைது செய்யப்படவில்லை.
முஸ்லிம்களின் எந்தவொரு காணிப்பிரச்சினைக்கும் தீர்வு காணப்படாமல் கரங்கவட்டை போன்ற முஸ்லிம்களின் காணிகள் புதிதாய் அபகரிக்கப்பட்டன.
கல்முனையில் முஸ்லிம்களுக்கெதிரான தமிழ் பேரினவாதிகளின் கை ஓங்கியது.
கல்முனை தேர்தல் மாவட்டத்தை பிரகடனப்படுத்துவது என்பது ரணில் சஜித் கட்சிக்கு மிட்டாய் சாப்பிடுவது போன்ற இலகுவான விடயம். இரவோடிரவாக செய்திருக்கலாம். செய்யவில்லை.
ஒற்றுமையாக இருந்த கல்முனை சாய்ந்தமருது மக்களை பிரிப்பதில் ரணிலும் சஜித்தும் முஸ்லிம் காங்கிரசின் முட்டாள்த்தனத்துக்கு துணை போயினர்.
கல்முனை முஸ்லிம்களின் இடங்களை தந்திரமாக அபகரிக்கும் தமிழ் பேரினவாதத்துக்கு ரணில் சஜித்தின் ஐ தே க அரசு துணை போனது.
கல்முனையை 1987ம் ஆண்டு இருந்தது போல் ஓரிரவில் வர்த்தமாணி மூலம் அறிவித்திருக்க முடியும். இதனால் சாய்ந்தமருதுக்கும் சபை கொடுத்திருக்க முடியும். இந்த சின்ன விடயத்தை கூட செய்யவில்லை.
இப்படியொரு மோசமான ஆட்சியாகவே ரணில் சஜித்தின் ஆட்சி இருந்ததை மறுக்க முடியுமா?
நான்கு வருடம் ஆட்சி செய்தும் கடந்த உள்ளூராட்சி தேர்தலில் ஐ தே க படுதோல்வி அடைந்தது. முஸ்லிம்கள் கைகொடுக்காமல் விட்டிருந்தால் ஆட்சியின் மானம் மிக மோசமாக கப்பலேறியிருக்கும்.
அப்படியிருந்தும் ரணில், சஜித் அரசு முஸ்லிம்களுக்கு நன்றிக்கடன் தீர்த்தனரா?
இன்னமும் நமக்கு இவர்கள் தேவையா என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் சிந்திக்க வேண்டும்.