சாய்ந்தமருது-
முக்கியத்துவம் குறைந்த செய்திகளுக்கு முன்னுரிமை வழங்குகின்ற பிரபல தமிழ் ஊடகங்கள் உலகின் முதன்மை செய்தியான ஐ.எஸ் இயக்கத் தலைவர் கொல்லப்பட்டது பற்றி கண்டுகொள்ளவில்லை.
குறுகிய காலத்துக்குள் உலகை திரும்பிப் பார்க்கவைத்த ஐ.எஸ் இயக்கத்தின் தலைவரை காட்டித் தருபவர்களுக்கு 25 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் வழங்கப்படும் என்று அமெரிக்கா பல வருடங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது.
ஆனாலும் அவரை காட்டிக்கொடுக்கின்ற துணிச்சல் யாருக்கும் வரவில்லை. அவரோ தனது வதிவிடத்தை சந்தேகம் வராதபடி குர்திஷ் மக்கள் அதிகம் வாழும் வடக்கு சிரியாவில் அமைத்திருந்தார்.
அல்-பக்தாதி அவர்கள் அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றியபடி இருந்ததாகவும், இறுதியாக துருக்கி நோக்கி செல்ல இருந்த நேரத்திலேயே காட்டிக்கொடுக்கப்பட்டார் என்றும் கூறப்படுகின்றது. துருக்கிக்கு சென்றிருந்தால் அவரை இலக்கு வைப்பது கடினம் என்பதனாலேயே தனது தாக்குலை அமெரிக்கா விரைவு படுத்தியது.
ஐ.எஸ் இயக்கத்திடம் இருந்து மசகு எண்ணை கொள்வனவு செய்வது தொடக்கம் அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவது வரைக்குமான உதவிகளை துருக்கியே செய்தது என்ற சந்தேகமே இதற்கு காரணமாகும்.
அல்-பக்தாதியின் மறைவிடம் குறித்து சில வாரங்களுக்கு முன்புதான் அமெரிக்காவின் சீ ஐ ஏ க்கு தகவல் கிடைத்தது. ஒசாமாவுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை போன்ற நடவடிக்கைக்கு அமெரிக்கா திட்டமிட்டதோடு அல்-பக்தாதியை கண்கானித்தவண்ணம் இருந்துள்ளது.
மிகவும் பலம்வாய்ந்த ஐ.எஸ் இயக்க தலைவர் நூற்றுக்கணக்கான மெய்க்காப்பாளர்களோடு இருப்பார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரே அவருக்கு பாதுகாப்பு வழங்கியிருந்தனர். அதிகமான ஆள்நடமாட்டம் இருந்தால் அது மேலதிக சந்தேகத்தை ஏற்படுத்தும் என்பதுதான் அதற்கு காரனமாகும்.
பாகிஸ்தானில் மறைந்திருந்த ஒசாமாவை கொல்வதற்கு ஆப்கானிஸ்தானிலிருந்து சத்தம் குறைந்த உலங்கு வானூர்தி மூலம் “சீல்” படைப் பிரிவினர் சென்றது போன்று ஈராக்கிலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட அமெரிக்க படையினர் பயிற்றுவிக்கப்பட்ட இராணுவ நாய்களுடன் அதேபாணியிலான உலங்கு வானூர்தியில் சென்றுள்ளார்கள்.
குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் அமெரிக்க படையினர்களால் அல்-பக்தாதியின் மறைவிடம் சுற்றிவளைக்கப்பட்டு தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது. சற்றும் எதிர்பாராத இந்த திடீர் தாக்குதலை எதிர்கொண்டு அவர்கள் பதில் தாக்குதல் நடாத்தியுள்ளார்கள்.
நூற்றுக்கணக்கான அமெரிக்க படையினர்களுடன் ஒருசில ஐ.எஸ் இயக்கத்தினர் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் போர் செய்துள்ளார்கள்.
இறுதியில் பக்தாதியின் அனைத்து மெய்க்காவலர்களும் கொல்லப்பட்ட பின்பு சத்தம் ஓய்ந்தது. அதன்பின்பு அவரது மறைவிடம் நோக்கி இராணுவத்தினர் செல்லாது பயிற்றுவிக்கப்பட்ட இராணுவ நாய்கள் அனுப்பப்பட்டது.
அப்போது நிலத்தடி மறைவிடத்துக்கு சென்ற அல்-பக்தாதி அவர்கள் தப்பிக்க முடியாத நிலையில் குண்டை வெடிக்கவைத்து தற்கொலை செய்துள்ளார். இந்த வெடிப்பினால் அவர் இருந்த இரண்டு மாடி கட்டிடம் முழுவதும் தரைமட்டமாகி சாம்பலானது.
இதனால் ஐ.எஸ் இயக்கத்தின் எந்தவொரு ஆவணங்களையும் அமெரிக்கப் படையினர்களால் கைப்பெற்ற முடியவில்லை. அத்துடன் கட்டடத்துக்குள் உள் நுழையவும் முடியவில்லை.
நள்ளிரவு வேளையில் நடாத்தப்பட்ட ஒசாமா பின் லேடனுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையானது சுமார் நாப்பது நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. அத்துடன் “சீல்” படைப்பிரிவினர் படுக்கையறை வரைக்கும் அதிரடியாக உள்ளே புகுந்து சுடப்பட்ட ஒசாமாவின் உடலை கைப்பெற்றியதுடன், கணணியில் இருந்த அல்கொய்தா இயக்கத்தின் அனைத்து ஆவணனக்ளையும் கைப்பெற்றி சென்றார்கள்.
ஆனால் அவ்வாறான நிலைமை அல்-பக்தாதிக்கு எதிரான இராணுவ நடவடிக்கையின்போது இருக்கவில்லை. இந்த சண்டை இரண்டு மணித்தியாலங்கள் நீடித்ததோடு இதில் அமெரிக்கப் படையினர்கள் அதிகம்பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சம்பவத்தை நேரில் கண்ட கிராமவாசிகள் கூறியுள்ளார்கள்.
இறுதியில் அல்-பக்தாதியின் உடலை இஸ்லாமிய முறைப்படி சடங்குகள் செய்யப்பட்டு ஒசாமாவை கடலில் வீசியதுபோன்று அல்-பக்தாதியின் உடலையும் கடலில் வீசியதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இங்கேதான் குழப்பமாக உள்ளது. அதாவது அல்-பக்தாதி ஓர் யூதர் என்று பிரச்சாரம் செய்த அதே அமெரிக்க சார்பு ஊடகங்கள்தான் தற்போது அல்-பக்தாதி இஸ்லாமிய சடங்குகள் செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டார் என்று கூறுகின்றது. அவர் ஓர் யூதர் என்றால் ஏன் இஸ்லாமிய சடங்கு செய்ய வேண்டும் என்பதுதான் அனைவரது கேள்வியாகும்.