67ஆவது அகவையில் தடம்பதிக்கும் அதிமேகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன


எம்.எஸ்.எம்.ஸாகிர்-
நேற்று (03) திங்கட்கிழமை அதிமேகு ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவின் 67ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகிறது.

இந்த நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன, 1951 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 03ஆம் திகதி பொலன்னறுவையில் உள்ள விவசாயக் குடும்பம் ஒன்றில் பிறந்தார்.

தனது ஆரம்ப கல்வியை பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் கற்றார். பின்னர் குண்டசாலை விவசாயக் கல்லூரியில் பயின்று, 1973இல் பட்டப்படிப்பை முடித்தார்.

1979இல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து அக்கட்சியின் மாவட்ட செயலாளராகப் பணியாற்றினார். பின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1980 இல் ரஷ்யாவின் ‘மாக்சிம் கோர்க்கி’ கல்விக் கழகத்தில் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றார்.

1989இல் பொலன்னறுவை மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டார். அதில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றார். 1994ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று சாதனை படைத்தார். பின்னர் மகாவலி அபிவிருத்தித் துறை பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் ஆற்றுப் பெருநிலம் மற்றும் ரஜரட்டை அபிவிருத்தி அமைச்சராகவும்,விவசாய அபிவிருத்தி, வேளாண்மை சேவைகள் அமைச்சராகவும், இறுதியில் சுகாதாரத் துறை அமைச்சராகவும் 2014 நவம்பர் 21வரை பதவியில் இருந்தார்.

2014 நவம்பர் 21 அன்று மைத்திரிபால சிறிசேன மேலும் தனது கட்சி உறுப்பினர்கள் பலருடன் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் இருந்து விலகி எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியில் இணைந்து கொண்டார்.

2015 ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இருமுறை ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து மைத்திரிபால சிறிசேன போட்டியிட்டார்.

இலங்கையின் அனைத்து நிருவாகக் கூறுகளும் ராஜபக்ஷ குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், ஊழல், உறவினருக்கான சலுகை போன்றவற்றால் இலங்கை சர்வாதிகார ஆட்சியை நோக்கி செல்வதாகவும் மைத்திரிபால சிறிசேன அவர் மீது குற்றம் சாட்டினார். தாம் பதவிக்கு வந்தால் 100 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்கப் போவதாகக் கூறினார். இவரது கட்சித் தாவலை அடுத்து, இவரது அமைச்சுப் பதவியும், கட்சிச் செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டு, கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார்.

இதேவேளை, எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவை மைத்திரிபாலசிறிசேன பெற்றார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க, ஆளும் கட்சி உறுப்பினர்களான துமிந்த திசாநாயக்க, ராஜித சேனாரத்தின, ரஜீவ விஜேசிங்க போன்ற பலரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளித்தனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது ஆட்சிக்காலம் 2016 ஆம் ஆண்டில் நிறைவடைவதற்கு முன்னதாகவே புதிய தேர்தலுக்கான அறிவிப்பு செய்யப்பட்டது. மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் வேட்பாளராக மூன்றாவது தடவையாகவும் தேர்தலில் போட்டியிடவிருப்பதாக அறிவித்தார். அதேவேளையில் ராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிட எதிர்க்கட்சியினர் ராஜபக்ஷவின் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்து, ஆளும் கூட்டணியில் இருந்து வெளியேறிய மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக அறிவித்தனர்.

இவர், 2015 ஜனவரி 8 இல் நடைபெற்ற ஜனாதிபதித்தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி கட்சியின் சார்பில் போட்டியிட்டு, 22தேர்தல் மாவட்டங்களில் கொழும்பு, கம்பஹா, கண்டி, நுவரெலியா, யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, புத்தளம், பதுளை, பொலன்னறுவை ஆகிய 12 மாவட்டங்களில் முதன்நிலை பெற்று, 51.28 சதவீத அதாவது 6,217,162 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

1971 ஜே.வி.பி புரட்சியின் போது கைது செய்யப்பட்டு, மைத்திரிபால சிறிசேன சிறையில் அடைக்கப்பட்டார். அதுமட்டுமல்லாது, அவர் அமைச்சராக இருந்த போது 2008ஆம் ஆண்டு ஒக்டோபர் 9ஆம் திகதி கொழும்பின் புறநகரான பிலியந்தலை, பொரலஸ்கமுவ என்ற இடத்தில் சென்ற வாகன அணித் தொடர் மீது தற்கொலைத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதன்போது ஒருவர் அதில் கொல்லப்பட்டதுடன் மேலும் ஏழு பேர் காயமடைந்தனர். அவர் சென்ற வாகனம் தாக்குதலில் இருந்து தப்பியது. அவர் மயிரிழையில் உயிர் தப்பினார்.

அரசியல் பலமும், குடும்பப் பின்னணியும், பௌத்த மக்களின் மகத்தான ஆதரவும் பெற்றிருந்த மஹிந்த ராஜபக்ஷவுடன் போட்டியிட்டு, வென்றுவிட முடியுமா? என்ற ஓர் ஐயப்பாடும் நிலவியது. அவற்றையெல்லாம் முறியடித்து ஒரு சாதாரண குடிமகனான மைத்திரிபால சிறிசேன, இந்நாட்டின் ஜனாதிபதியாக வெற்றிவாகை சூடியமை ஒரு வரலாற்றுப் பதிவாகும்.

2015 ஜனவரி 9 ஆம் திகதி இலங்கையின் 6ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன உச்சநீதிமன்ற நீதியரசர் க.சிறீபவன் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

அன்று முதல் நாட்டின் ஜனாதிபதியாக இருந்து சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் என அனைத்து இன மக்களுக்கும் எவ்வித வேறுபாடும் காட்டாமல் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன ஆற்றிவரும் பணிகள் நாட்டு மக்கள் வாழ்த்தும் வகையில் அமைந்துள்ளன.

ஜனாதிபதியின் நலனுக்காக நாட்டின் நாலா புறங்களிலும் அனைத்து சமய மக்களினாலும் சமயநிகழ்வுகள் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

67ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் ஜனாதிபதிக்கு நாமும் எமது உள்ளம் கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -