2025 ஜூன் 18 இல் ஈரானிய சுப்ரீம் லீடர் இமாம் அலீ கொமேனி அவர்கள் ஆற்றிய உரை.



ளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்......
மாபெரும் ஈரானிய தேச மக்களுக்கு எனது ஸலாம்!
முதலில், சமீபத்தில் எதிரிகளால் நம் மீது திணிக்கப்பட்ட இந்த நெருக்கடி நிலையில் நம் அன்பார்ந்த மக்கள் காட்டிய நடத்தையைப் பாராட்டுவதோடு என் உரையைத் தொடங்க விரும்புகிறேன். ஈரானிய மக்கள் தங்கள் கண்ணியம், துணிச்சல் மற்றும் சூழ்நிலையை சரியாக மதிப்பிடும் திறன் கொண்டவர்கள் என்பதை உலகிற்கு நிரூபித்துள்ளனர். ஃகதீர் பண்டிகைக் கொண்டாட்டங்களின்போது மக்கள் உலகிற்கு வெளிப்படுத்திய மகத்தான எழுச்சி ஒரு பெரும் இயக்கமாகப் பதிவானது.
அண்மைக் காலங்களில் மக்கள் திரண்ட கூட்டங்களும், பேரணிகளும், வெள்ளிக்கிழமைத் தொழுகைகளில் அவர்கள் காட்டிய ஒற்றுமையும், தொழுகைக்குப் பிந்தைய அவர்களின் பேரணிகளும் — இவை அனைத்தும் நமது அன்பு தேசத்தின் பகுத்தறிவு, ஆன்மீக வலிமை, துணிச்சல், மற்றும் சூழ்நிலையைச் சரியாக எடைபோடும் திறன் ஆகியவற்றின் வளர்ச்சியையும், பலத்தையும் பறைசாற்றின.
இத்தகைய ஆன்மீக, பௌதிக ஆற்றலையும் சாத்தியக்கூறுகளையும் இந்த இறைநம்பிக்கை கொண்ட மக்களுக்கு வழங்கிய இறைவனுக்கு என் நன்றி. அல்ஹம்துலில்லாஹ்!
எதிரியின் தாக்குதலுக்கு எதிர்வினையாக, பெண் தொலைக்காட்சித் தொகுப்பாளர் வெளிப்படுத்திய அழகான, அர்த்தமுள்ள சொயலை இங்கே குறிப்பிட வேண்டியது அவசியமென உணர்கிறேன். அவர் "அல்லாஹு அக்பர்" [இறைவன் மிகப் பெரியவன்] என்று முழங்கி, ஈரானிய தேசத்தின் வல்லமையை உலகிற்கே உணர்த்தினார். அது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு; மிகவும் போற்றுதலுக்குரியது.
இரண்டாவதாக, இந்த சியோனிஸ்ட் ஆட்சியின் மூடத்தனமான தீய தாக்குதல் நடந்தபோது, நம் அரசாங்கத்தினர் அமெரிக்காவுடன் மறைமுகமாகவும் மத்தியஸ்தர்கள் மூலமாகவும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தனர் என்பதே.‌
ஈரானின் தரப்பிலிருந்து எந்தவொரு இராணுவ நகர்வுக்கோ அல்லது திடீர், கடுமையான நடவடிக்கைகளுக்கோ எந்தவித அறிகுறியும் தென்படவில்லை. நிச்சயமாக, சியோனிச ஆட்சி மேற்கொண்ட இந்த தீய நடவடிக்கையில் அமெரிக்காவுக்குத் தொடர்பு இருப்பதாக ஆரம்பத்திலிருந்தே சந்தேகிக்கப்பட்டது. ஆனால் அவர்களின் சமீபத்திய கருத்துக்களைக் கவனத்தில் கொண்டு, இந்த சந்தேகம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது.
ஈரானிய தேசம், எப்போதுமே, எந்த திணிக்கப்பட்ட போருக்கும் எதிராக உறுதியுடன் நிற்கும். அதுபோலவே, எந்த திணிக்கப்பட்ட சமாதானத்தையும் ஈரானிய தேசம் உறுதியாக எதிர்க்கிறது. வற்புறுத்தலுக்கு ஈரானிய தேசம் ஒருபோதும் அடிபணியாது. அறிஞர்கள், பேச்சாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் — குறிப்பாக உலகளாவிய பொதுக் கருத்தில் செல்வாக்கு செலுத்துபவர்கள் — இந்த கோட்பாடுகளை தங்கள் பார்வையாளர்களுக்கு தெளிவாக விளக்க வேண்டும், மேலும் அவற்றைத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். எதிரிகள் தங்கள் ஏமாற்றும் பிரச்சாரங்களால் உண்மையை சிதைக்க அவர்கள் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
சியோனிச எதிரி ஒரு மாபெரும் தவறைச் செய்து, கடுமையான குற்றமிழைத்துள்ளது. அது தண்டிக்கப்பட வேண்டும், ஏற்கனவே தண்டிக்கப்பட்டு வருகிறது. இக்கணமே அது தண்டனையை அனுபவிக்கிறது. ஈரானிய தேசமும், நமது ஆயுதப் படைகளும் இந்த தீய எதிரிக்கு வழங்கிய, தற்போது செயல்படுத்தி வரும், மற்றும் எதிர்காலத்திற்காகத் திட்டமிட்டுள்ள தண்டனை மிகக் கடுமையானதாகும், அது ஏற்கனவே அவர்களைப் பலவீனப்படுத்திவிட்டது. அதன் அமெரிக்க நண்பர்கள் களத்தில் இறங்கி இத்தகைய கருத்துக்களைத் தெரிவிப்பதே அந்த ஆட்சியின் பலவீனம் மற்றும் இயலாமைக்கு ஒரு தெளிவான அறிகுறியாகும்.
கடைசி விசயம் என்னவென்றால், அமெரிக்க அதிபர் அண்மையில் அச்சுறுத்தல்களை விடுத்துள்ளார். அவர் நம்மை அச்சுறுத்தியுள்ளார். அச்சுறுத்துவதோடு மட்டுமல்லாமல், ஈரானிய மக்கள் அவருக்கு அடிபணிய வேண்டும் என்று வெளிப்படையாகக் கோருவதற்கு அபத்தமான, ஏற்றுக்கொள்ள முடியாத சொல்லாடல்களையும் பயன்படுத்துகிறார். இத்தகைய வார்த்தைகளைக் கேட்கும்போது ஒருவருக்கு உண்மையிலேயே ஆச்சரியம் ஏற்படும்.
முதலாவதாக, அச்சுறுத்தலுக்குப் பயப்படுபவர்களை அவர்கள் அச்சுறுத்த வேண்டும். ஈரானிய தேசம் அத்தகைய அச்சுறுத்தல்களுக்கு அஞ்சுவதில்லை. "பலவீனமடையாதீர்கள், துக்கப்படவும் வேண்டாம்: நீங்கள் நம்பிக்கையுடன் இருந்தால், நீங்களே மேலோங்குவீர்கள்" (திருக்குர்ஆன் 3:139). ஈரானிய தேசம் இந்த இறை வசனத்தை உறுதியாக நம்புகிறது, அச்சுறுத்தல்கள் ஈரானிய மக்களின் நடத்தை அல்லது மனநிலையைப் பாதிப்பதில்லை.
இரண்டாவதாக, ஈரானிய மக்களிடம் சரணடையச் சொல்வது புத்திசாலித்தனமான செயல் அல்ல. ஈரான், ஈரானிய மக்கள் மற்றும் ஈரானின் வரலாற்றை அறிந்த புத்திசாலிகள் இதுபோன்ற வார்த்தைகளை ஒருபோதும் கூறமாட்டார்கள். ஈரானிய மக்கள் எதற்கு சரணடைய வேண்டும்? ஈரானிய மக்கள் சரணடையும் இனம் அல்ல. நாம் யாரையும் தாக்கவில்லை, மேலும் நிச்சயமாக யாரும் நம்மை தாக்குவதை பொறுத்துக்கொள்ள மாட்டோம், மேலும் யாருடைய தாக்குதல்களுக்கும் பதிலளிப்பதாக சரணடைய மாட்டோம். இதுவே ஈரானிய தேசத்தின் தர்க்கம். இதுவே ஈரானிய தேசத்தின் உணர்வு.
நிச்சயமாக, இப்பிராந்தியத்தின் கொள்கைகளை நன்கு அறிந்த அமெரிக்கர்கள், இந்த விவகாரத்தில் [போரில்] அமெரிக்கா நுழைவது அதன் சொந்த நலனுக்கு 100% பாதகமாகவே அமையும் என்பதை அறிவார்கள். அது அனுபவிக்கும் சேதம் ஈரானுக்கு ஏற்படக்கூடிய எந்தத் தீங்கையும் விட மிக அதிகமாக இருக்கும். அமெரிக்கா இந்த மோதலில் இராணுவ ரீதியாக நுழைந்தால் அது அனுபவிக்கும் சேதம் நிச்சயமாக ஈடுசெய்ய முடியாததாக இருக்கும்.
நமது அன்பான தேசத்தின் மக்களுக்கு இந்த உன்னதமான திருவசனத்தை எப்போதும் மனதில் கொள்ளுமாறு நான் வலியுறுத்த விரும்புகிறேன். வாழ்க்கை வழக்கம் போல் நகர்கிறது, இறைவனுக்கு நன்றி. எதிரிக்கு நீங்கள் அஞ்சுவதையோ அல்லது அவர்களுக்கு முன் நீங்கள் பலவீனமாக உணர்வதையோ ஒருபோதும் உணர விடாதீர்கள். எதிரி நீங்கள் அஞ்சுவதை உணர்ந்தால், அவர்கள் உங்களை ஒருபோதும் விட்டுவிட மாட்டார்கள். இன்று வரை நீங்கள் வெளிப்படுத்திய அதே வலிமையான நடத்தையுடன் தொடருங்கள்.
மற்றவர்களுக்கு சேவை வழங்குவோர், மக்களுடன் நேரடியாகப் பழகுவோர், மற்றும் பிரச்சாரம் மற்றும் தெளிவுபடுத்தும் பணிகளுக்குப் பொறுப்பானோர் தங்கள் கடமைகளை வலுவாக தொடர்ந்து செய்ய வேண்டும், மேலும் சர்வவல்லமையுள்ள இறைவனின் மீது தங்கள் நம்பிக்கையை வைக்க வேண்டும்.
"வெற்றி அல்லாஹ்விடமிருந்தே வருகிறது, அவன் மிகைத்தவன், மகா ஞானவான்" (திருக்குர்ஆன் 3:126) இன்ஷா அல்லாஹ் சர்வவல்லமையுள்ள அல்லாஹ் நிச்சயமாக, ஈரானிய தேசத்திற்கும், உண்மைக்கும், மற்றும் நியாயமான தரப்பினருக்கும் வெற்றி அளிப்பான்.
உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும், அருளும், கருணையும் உண்டாவதாக!

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :