முஹம்மட் ஜெலீல்,நிந்தவூர்-
நமது பிரதேசங்களில் மாலை இருள் தொடங்கும் நேரங்களில் அதிகளவான மாணவிகள் மாலை நேர வகுப்பு முடிவடைந்து வீதியில் தனிமையில் செல்வதைக் காணக்கூடியதாகவுள்ளது தற்போது நாட்டில் எங்கு பார்த்தாலும் நாளுக்கு நாள் பரவிவரும் சிறுவர் துஷ்பிரயோகங்களை கேட்டும் பத்திரிகைகளில் படித்தும் வருகின்றோம் இப்படியானயொரு காலகட்டத்தில் வயதான பெண் மாணவிகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் இதுபோன்ற மாலை நேர வகுப்புக்கள் கட்டாயத் தேவைதானா அதை வேறு நேரங்களில் நடத்துவதில் ஏதும் சிரமங்கள் ஏற்படுகின்றதாயென்ற கேள்வியும் எழுந்துள்ளது..
ஊரில் எங்கு பார்த்தாலும் “டியுசன்.வகுப்புக்கள் மாணவ மாணவிகளுக்கு நேரமே இல்லாத அளவுக்கு நாள்தோறும் வகுப்புக்கள் தொடங்கப்பட்டு நேரம்கெட்ட நேரத்திலெல்லாம் மாணவர்களின் மூளைச் செல் நரம்புகள் வெடிக்கும் அளவுக்கு வகுப்புக்கள் நடைபெறுவதை காணமுடிகின்றது.
பெற்றோர்களின் எண்ணம் தன் குழந்தைகள் நல்லபடியாக படித்து இச்சமுதாயத்தில் சிறந்த கல்வி மேதைகளாக வரவேண்டுமென்ற எண்ணத்தில் காலநேரம் தெரியாத அளவுக்கு வகுப்புக்களுக்கு அனுப்பிவைக்கின்றோம் ஆனால் அந்த நேரங்கெட்ட நேரமே நமது பெண் குழந்தைகளுக்கு எமகெட்ட நேரமாகிவிடுகின்றதென்பதை ஒரு போதும் எண்ணுவதில்லை.
நேற்று நடந்த சம்பவம் ஒன்றினை இவ்விடத்தில் பதிவிடலாமென்று நினைக்கின்றேன் ஒரு பெண் மாணவி மாலை நேர வகுப்பு முடிவடைந்து 6.30, மணியளவில் தனிமையில் வீதியோரமாக சென்றுகொண்டிருக்கும் வேளையில் இரண்டு பருவ வயது மதிக்கத்தக்க ஆண் பிள்ளைகள் அந்த மாணவியை ஏதோ கேலி செய்துகொண்டு செல்வதை குறிகிய தூரத்தில் வந்துகொண்டிருந்த என்னால் காணமுடிந்தது உடனே என்னைக்கண்ட அந்த ஆண் பிள்ளைகள் வேகமாக சென்றுவிட்டார்கள்.
மேலும் இதுபோன்ற அனாச்சார நிகழ்வுகள் இனியும் நிகழ்வாதிருக்க மாணவிகளுக்கு மாலை நேர வகுப்புக்களை நிறுத்திக்கொள்ளுமாறு ஆசிரியர்களிடம் பெற்றோர்கள் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன்.
