தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2026ஆம் ஆண்டுக்கான மெய்வல்லுநர் போட்டிகளும் பரிசளிப்பு விழாவும்!



தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2026ஆம் ஆண்டுக்கான மெய்வல்லுநர் விருதுகள் வழங்கும் நிகழ்வும், விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த வீரர், வீராங்கனைகளை கௌரவிக்கும் பரிசளிப்பு விழாவும் அண்மையில் பல்கலைக்கழக வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

பல்கலைக்கழக விளையாட்டுப் பிரிவின் ஆலோசனைத் தலைவர் கலாநிதி யூ.எல். செயனுதீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழும், உடற்கல்விப் பிரிவின் பதில் பணிப்பாளர் ஐ.எம். கடாபி அவர்களின் நெறிப்படுத்தலின் கீழும், பல்கலைக்கழக விளையாட்டுத்துறையினால் இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

மாணவர்களின் விளையாட்டுத் திறமைகள், அர்ப்பணிப்பு மற்றும் சாதனைகளைப் பாராட்டும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் சிறந்து விளங்கிய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். 

இந்நிகழ்வில் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன் கலந்து கொண்டதுடன், பீடாதிபதிகளான பேராசிரியர் எம்.எம். பாஸில், பேராசிரியர் எம்.ஏ.எல். அப்துல் ஹலீம், பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா, கலாநிதி ஆர்.கே. அஹ்மட் றிபாய் காரியப்பர், பதிவாளர் எம்.ஐ. நௌபர் உள்ளிட்ட பல்கலைக்கழக நிர்வாகத்தினர், கல்வியாளர்கள், விளையாட்டுத்துறை அதிகாரிகள், பயிற்றுவிப்பாளர்கள், மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

விழாவின் முக்கிய அம்சமாக, 2026ஆம் ஆண்டுக்கான இடைப் பீட விளையாட்டுப் போட்டிகளில் பெற்ற பெறுபேறுகளின் அடிப்படையில் பீடங்களுக்கான வெற்றிக் கிண்ணங்களும் வழங்கப்பட்டன. அதன்படி, வர்த்தக முகாமைத்துவ பீடம் மொத்தமாக 200 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்று சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டது. பொறியியல் பீடம் 132 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும், தொழில்நுட்பவியல் பீடம் 128 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.

அதேவேளை, சிறந்த விளையாட்டு வீரர், சிறந்த விளையாட்டு வீராங்கனை உள்ளிட்ட பல்வேறு தனிநபர் மற்றும் குழு விருதுகளும் வழங்கப்பட்டு மாணவர்களின் அர்ப்பணிப்பும் திறமைகளும் கௌரவிக்கப்பட்டன.

மாணவர்களிடையே ஒற்றுமை, ஒழுக்கம், தலைமைத்துவம், குழு உணர்வு மற்றும் ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை வளர்க்கும் வகையில் அமைந்திருந்த இந்நிகழ்வு, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விளையாட்டுத்துறையின் தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் சாதனைகளை வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாக அமைந்தது.

நிகழ்வின் நிறைவில், விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்காக பங்களிப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டதுடன், எதிர்கால தேசிய மற்றும் சர்வதேச மட்டப் போட்டிகளில் பல்கலைக்கழக மாணவர்கள் மேலும் பல வெற்றிகளைப் பெற்று பல்கலைக்கழகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டன.

(படங்கள் அக்னி)





 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :