ந.குகதர்சன்,
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் மூன்று பேரை அவர்கள் பயன்படுத்திய முச்சக்கரசண்டி மற்றும் 70 கிலோ கிராம் மிளகுடன் செவ்வாய்கிழமை இரவு தாம் கைது செய்ததாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
ஓட்டமாவடி காவத்தமுனை கிராமத்திலுள்ள ஆலையொன்றிலிருந்து மிளகு திருடப்பட்டதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இதன் போது அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து ஓட்டமாவடி வர்த்தக நிலையமொன்றில் மிளகை விற்பனைக்காக வைத்திருந்த வேளையில் இந்த சந்தேக நபர்களை கைது செய்ததாகவும் பொலிஸார் கூறினர்.
இந்த சந்தேக நபர்களுடன் தொடர்புடைய இன்னும் சிலர் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.(ந)
