இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை எரித்ததாக கூறி, 27 வயது பெண் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், 11 பொலிஸ்காரர்களுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆப்கானிஸ்தானில் கடந்த மார்ச் மாதம் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை எரித்ததாக பார்குந்தா என்ற அந்த பெண்ணை பட்டப்பகலில் பல ஆண்கள் சேர்ந்து அடித்து கொன்றனர்.
அப்படியும் ஆத்திரம் தீராத அக்கும்பல் அவரது உடலை அருகில் இருந்த ஆற்றுக்கு எடுத்து சென்று தீயிட்டு எரித்துள்ளது. பின்னர் கருகிய உடலை ஆற்றின் சகதியில் போட்டுள்ளனர். இந்த கொடூரத்தை பலர் தங்கள் செல்போனில் படம் எடுத்துள்ளனர். மேலும் பொலிஸாரும் இந்த கொடூரத்தை தடுக்காமல் வேடிக்கை பார்த்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக 49 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். விசாரணையின் முடிவில் இம்மாதம் 6ம் திகதி 4 பேருக்கு மரண தண்டனையும், 8 பேருக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் 18 பேரை விடுதலை செய்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
எஞ்சிய 19 பொலிஸாரின் நிலை பற்றி பின்னர் அறிவிப்பதாக நீதிமன்றம் கூறியிருந்தது. அதன்படி இன்று 11 பொலிசாருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
சம்பவம் நடந்த போது அங்கு இருந்த பொலிசார் அனைவரும் குற்றத்தை தடுக்காமல் வேடிக்கை பார்த்ததாகவும், அப்பெண்ணை காக்க தவறிவிட்டதாக நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் 8 பொலிசார் போதிய ஆதாரம் இல்லை என கூறி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மிகவும் பழமைவாதிகள் நிறைந்த நாடான ஆப்கானிஸ்தானில் இப்பிரச்சனை மிகப்பெரிய கொந்தளிப்புக்கும் போராட்டங்களுக்கும் காரணமாக அமைந்தது. மேலும் கொல்லப்பட்ட பெண் பல ஆண்டுகளாகவே மனநிலை சரியில்லாமல் இருந்தார் என்றும், உண்மையில் அவர் குரானை எரிக்கவில்லை எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.(ந)
