நாடு வங்குரோத்து நிலையை அடைந்தால் எதிர்வரும் 10 வருடங்களுக்கு அந் நிலையிலிருந்து மீள முடியாது. 2020ம் ஆண்டில் சர்வதேச நாணய நிதியத்தை நாடியிருந்தால் அந்நிய செலாவணி பிரச்சினைக்கு தீர்வு கிட்டியிருக்கும். ஆனால் காலம் கடந்து தற்போது சர்வதேச நாணய நிதியத்தை நாடினால் அது இலங்கை வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது என்பதை நாமே ஏற்றுக் கொள்வதைப் போன்றாகிவிடும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாரளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
1987, 2009 மற்றும் 2017ம் ஆண்டில் காணப்பட்டதை விட பாரதூரமான நிலைமையிலேயே நாடு தற்போதுள்ளது. அண்மையில் வெளியிடப்பட்டுள்ள தரப்படுத்தல்களுக்கமைய நாடு வங்குரோத்து நிலையை அடைவதை தடுக்க முடியாத நிலையிலேயே காணப்படுகிறது. எனவே இதிலிருந்து மீள்வதற்கான பொது வேலைத்திட்டமொன்றை எதிர்வரும் ஜனவரியில் பாரளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்தார்.
கெட்டம்பே நாயக்க தேரரை நேற்று சந்தித்து ஆசி பெற்றுக்கொண்ட போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்:-
நாம் ஏனைய அரசியல் கட்சிகளுடன் எவ்வித திட்டமிடல் இன்றி ஒன்றிணைவது பிரயோசனமற்றது. எனவே தான் சிறந்த வேலைத்திட்டமொன்றுடன் முன்னோக்கிச் செல்ல தீர்மானித்திருக்கின்றோம். அதற்கமைய முதலாவதாக மக்களிடம் நாட்டின் தற்போதைய நிலை குறித்த உண்மையை உணர்த்தவுள்ளோம். வெளிநாட்டு கடனை செலுத்த முடியாது என்று கூறினால் நாடு வங்குரோத்து நிலையை அடைந்துவிட்டது என்று பொருள்படும். அவ்வாறு வங்குரோத்து நிலையை அடைந்தால் எதிர்வரும் 10 வருடங்களுக்கு நாட்டை முன்னேற்ற முடியாது.
2010ம் ஆண்டில் கிரீஸ் நாடு வங்குரோத்து நிலையை அடைந்து இன்றுவரையான 11 வருட காலப்பகுதியில் நான்கு அரசாங்கங்கள் மாற்றம் அடைந்துள்ளன. ஆனால் இன்னும் அந்நாடு முன்னேற்றமடையவில்லை. அந்நாடு இலங்கையை விட 8 மடங்கு அதிக பலம்வாய்ந்த நாடாகும். அத்தோடு ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாகவும் விளங்குகிறது. அவ்வாறிருந்தும் அந்நாட்டை இன்று வரையும் கட்டியெழுப்ப முடியாமலுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளுக்கு மத்தியில் காணப்படும் லெபனான் நாடு கூட வங்குரோத்து அடைந்தே செல்கிறது.
இலங்கையில் மூளைசாலிகள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேறி செல்கின்றனர். நாட்டில் தற்போதுள்ள பிரச்சினைக்கு தீர்வு வழங்காவிட்டால் அவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று தமது தொழில்வாய்ப்புக்களை அமைத்துக் கொள்வவார்கள் என்று வணிக அமைப்புக்கள் எச்சரித்துள்ளன. அதே வேளை உயர்கல்விக்காக பெரும்பாலான பெற்றோர் தமது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதால் டொலர் நாட்டிலிலிருந்து வெளியேற்றப்படுகிறது.
எனவே இப் பிரச்சினைகளுக்கு துரித தீர்வு காணாவிட்டால் பஞ்சம் ஏற்படும். டொலர் தட்டுப்பாடு மற்றும் உரப் பிரச்சினையால் ஏற்பட்டுள்ள உணவுத் தட்டுப்பாடு என்பன அதில் தாக்கம் செலுத்தும். அதே போன்று மின்சாரம், எரிபொருள், மருந்து உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் டொலர் நெருக்கடியே தாக்கம் செலுத்தும், இன்றும் கூட எரிவாயு, எரி பொருள் மற்றும் நிலக்கரி என்பவற்றை இறக்குமதி செய்வதில் பாரிய சிக்கலே நிலவுகிறது.
ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் நீர் மின் உற்பத்தி பாதிக்கப்படுமாயின், மின் வெட்டும் தவிர்க்க முடியாததாகும். எரிபொருள் இறக்குமதிக்கான விலை மனு கோரப்படுகின்ற போதிலும் அதற்கு எவரும் முன்வருவதில்லை. அதற்கான பிரதான காரணம் இலங்கையிலுள்ள வங்கி கட்டமைப்பின் மீது நம்பிக்கையற்ற நிலையே ஏற்பட்டுள்ளது.
1987ம் ஆண்டில் J.V.P கலவரம் நடைபெற்றது. J.R ஜயவர்த்தனவின் இறுதி ஆட்சிக்காலம் என பல்வேறு நெருக்கடிகளால் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வேகம் 1.7% குறைவடைந்தது. எனினும் மறைந்த ஜனாதிபதி பிரேமதாச சர்வதேச நாணய நிதியத்தை நாடியமையால் அந்த நெருக்கடிக்கு தீர்வு காணப்பட்டது.
2010ம் ஆண்டில் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்திலும் இதே போன்ற நெருக்கடி ஏற்பட்ட போதும், 2016ம் ஆண்டு வெளிநாட்டுக் கடன் செலுத்துவதில் பிரச்சினை ஏற்பட்டபோதும் சர்வதேச நாணய நிதியத்தையே நாடினோம். ஆனால் தற்போதுள்ள நிலைவரத்தின் அடிப்படையில் சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதால் நாட்டின் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாது. காரணம் 1987, 2010 மற்றும் 2016ம் ஆண்டில் காணப்பட்டதை விட பாரதூரமான நிலையே நாட்டில் தற்போதுள்ளது.
அண்மையில் வெளியிடப்பட்டுள்ள. தரப்படுத்தல்களுக்கமைய நாடு வங்குரோத்து நிலையை அடைவதை தடுக்க முடியாத நிலையிலேயே காணப்படுகிறது.
இவ்வாறான நிலையில் நாட்டின் துறைமுகங்கள், விமான நிலையம் உள்ளிட்டவற்றை மிகக்குறைந்த விலையில் வெளிநாட்டவர்கள் வாங்குவதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றிலிருந்து மீள்வதற்கான பொதுவான வேலைத்திட்டமொன்றை ஜனவரியில் நாம் முன்வைப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். கட்சி பேதமின்றி அனைத்து தரப்பினரிடமும் பாரளுமன்றத்தில் இதனை சமர்ப்பிப்பதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம் என்றார்.
0 comments :
Post a Comment