காதி நீதிமன்றங்களை முழுமையாக இல்லாமல் செய்து, முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் சில பிரிவுகளை நீக்குவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கையானது, முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பெரும் பரபரப்பையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளதாக கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், ஏறாவூர் நகர சபை உறுப்பினருமான எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.
முஸ்லிம் தனியார் சட்டத்தினை இல்லாதொழிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து இன்று (19) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தனித்துவ அடையாளத்துடன் காணப்படும், முஸ்லிம் தனியார் சட்டத்தினை இல்லாதெழிப்பதற்கும், அதில் மாற்றங்களைச் செய்வதற்கும் பல்வேறு காய்நகர்த்தல்கள் இடம்பெற்று வருகிறது. அந்த வகையில், தற்போது காதி நீதிமன்ற முறையை இல்லாமல் செய்வதற்கும், முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் சில பிரிவுகளை நீக்குவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
காதி நீதிமன்ற நடவடிக்கைகளில் சில குறைபாடுகள் காணப்படுகின்ற போதும், அந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கும், முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்வதற்கும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள், மார்க்க அறிஞர்கள், புத்திஜீவிகள் இணக்கம் தெரிவித்து, தங்களது பரிந்துரைகளையும் முன்வைத்திருந்தனர். அதன் பிரகாரம் கடந்தகாலங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் இந்த விடயத்தில் திருத்தங்களைச் செய்வதற்காக சில குழுக்களை அமைத்த போதும் எதுவுமே நடைபெறவில்லை.
முஸ்லிம்களை நெறிப்படுத்தும் தனியார் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், முஸ்லிம் அரசியல் தலைவர்கள், உலமாக்கள், புத்திஜீவிகளின் ஆலோசனைகள் பெறப்பட்டு, முஸ்லிம் சமூகம் ஏற்றுக்கொள்ளும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஏறாவூர் நகர சபையின் கடந்த அமர்வின் போது முஸ்லிம் தனியார் சட்டத்தினை இல்லாதொழிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை நிறுத்தக்கோரி பிரேரணை ஒன்றினை சமர்ப்பித்து உரையாற்றியுள்ளேன். இதுதொடர்பில் தீர்மாணமொன்றை நிறைவேற்றி, அதனை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நீதி அமைச்சருக்கும் அனுப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளேன் என்றார்.
0 comments :
Post a Comment