அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஒருவர் தமக்கு எதிரியாக தெரிந்தால் அவரை எதிர்க்கும் எதிரிகள் நல்லவர்களாக தெரிகிறார்கள். மஹிந்தவை எதிரியாக பார்க்கும் முஸ்லிம் சமூகம் சந்திரிக்காவை நண்பராக பார்க்கிறது. இதே சந்திரிக்கா முஸ்லிம் சமூகத்துக்கும் அவரை ஆட்சிபீடத்தில் ஏற்றிய தலைவர் அஷ்ரபுக்கும் செய்த துரோகங்களை முஸ்லிம் சமூகம் மறந்து விட்டது.
1996ம் ஆண்டு முஸ்லிம்களின் பறிக்கப்பட்ட தீகவாப்பி காணிகளுக்காக மாற்றுக்காணி வழங்க அமைச்சர் அஷ்ரப் நடவடிக்கை எடுத்திருந்தார். காணி பத்திரங்களும் தயார் செய்யப்பட்டன.
இந்த நிலையில் ஜே வி பியினர் அம்பாரை நகருக்கு வந்து முஸ்லிம்களுக்கு காணிகளை வழங்க கூடாது என ஆர்ப்பாட்டம் செய்ததால் அவற்றை வழங்காமல் தடுத்தவர் இந்த சந்திரிக்காவாகும்.
2001ம் ஆண்டு ஒரு சிகரட் பிரச்சினையில் மாவனல்ல தாக்கப்பட்ட போது அதனை உடனடியாக கட்டுப்படுத்தாமல் மூன்று நாட்கள் மாவனல்லையையை எரிய விட்டு முசுப்பாத்தி பார்த்தார். 10 வருடம் ஆட்சி செய்த சந்திரிக்கா ஒரு மௌலவிக்கேனும் மௌலவி ஆசிரிய நியமனம் கொடுக்கவில்லை.
இவை அத்தனையையும் மறந்த முஸ்லிம் சமூகம் கடந்த ஜனாதிபதி தேர்தலில் ரணிலின் நல்லாட்சியை கொண்டு வந்தால் ஞானசாரவை நாய்க்கூண்டில் அடைப்போம் என்ற சந்திரிக்காவின் பேச்சை நம்பி இந்த ஆட்சியை கொண்டு வந்தது. கடைசியில் என்ன நடந்தது. முஸ்லிம்கள் மிகப்பெரும் துன்பங்களை அனுபவிக்க விட்டுவிட்டு வெளிநாடு போய் விட்டு இப்போது வந்து மஹிந்த, கோட்டாவுக்கெதிராக பேசுகிறார்.
ஒரு உண்மை முஸ்லிம் இரண்டு தடவைகள் படுகுழியில் விழமாட்டான். சந்திரிக்காவை நம்பிய முஸ்லிம் சமூகம் பல தடவை குழியில் விழுந்து விட்டது.
இந்த நாட்டு ஜனாதிபதிகளில் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் போதே முஸ்லிம் சமூகம் பாரிய பல நன்மைகளையும் அபிவிருத்திகளையும் பெற்றது. இறுதி காலத்தில் சில தவறுகள் நடந்தாலும் அந்தத்தவறை மஹிந்த தரப்பு தவறுதான் என ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால் இந்த ரணில், சஜித் அரசில் முஸ்லிம்களுக்கு நடந்த கொடூரங்கள் தமது தவறே என இன்னமும் இந்த அரசு ஏற்காமல் மஹிந்த தரப்பில் போட்டுவிட்டு தப்பிக்க முனைகிறது. இத்தகைய கோழை ஆட்சியை மீண்டும் கொண்டு வந்தால் இதே நிலைதான் சமூகத்துக்கு ஏற்படும்.