நாடு பூராகவும் தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்றுவரும் நிலையில் அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு பொலிஸ் நிலையங்களில் தபால் மூல வாக்களிப்பு காலை 9 மணி முதல் மும்முரமாக இடம்பெற்று வருகின்றது.
திங்கட்கிழமை(4) அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பொலிஸ் நிலையம் சம்மாந்துறை பொலிஸ் நிலையம் சவளைக்கடை பொலிஸ் நிலையம் உள்ளிட்ட பொலிஸ் நிலையங்களில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருவதுடன் 7,920 வாக்களிப்பு நிலையங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவால் அமைக்கப்பட்டுள்ளன. தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளவர்கள் அவர்களது நிறுவனத்திலே வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இம்முறை தபால் மூலம் வாக்களிப்பதற்காக 6,59,514 பேர் தகுதிபெற்றுள்ளனர். எதிர்வரும் 4ஆம் திகதி பொலிஸார் மற்றும் தேர்தல் செயலகத்தின் அதிகாரிகள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் வாக்களிக்க முடியாதவர்கள் எதிர்வரும் 7ஆம் திகதி மாவட்ட செயலகங்களில் வாக்களிக்க முடியும். காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அரச அதிகாரிகள் தமது வாக்குகளை பதிவுசெய்ய முடியுமெனவும் தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் அறிவித்துள்ளது.