விசேட குற்ற புலனாய்வு பிரிவின் கல்முனை அலுவலகத்தை பூரண அதிகாரத்துடன் மீண்டும் இயங்க வைக்க வேண்டும்


- கல்முனை சட்டத்தரணிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்-

எஸ்.அஷ்ரப்கான்-
விசேட குற்ற புலனாய்வு பிரிவின் கல்முனை அலுவலகத்ததை முழுமையான அதிகாரங்களுடன் மீண்டும் இயங்க வைக்க வேண்டும் என்று கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் மாதாந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவர் ஆரிப் சம்சுதீன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கடந்த 40 வருடங்களாக முழுமையான அதிகாரங்களுடன் இயங்கி வந்த விசேட குற்ற புலனாய்வு பிரிவின் கல்முனை அலுவலகத்தின் அதிகாரங்கள் கடந்த ஒரு வருட காலமாக குறைப்பு செய்யப்பட்டு இருப்பது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

நாடளாவிய ரீதியில் விசேட குற்ற புலனாய்வு பிரிவு அலுவலகங்களில் ஆரம்பத்தில் 02 இலட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் சம்பந்தப்பட்ட முறைப்பாடுகளை மேற்கொள்ள முடிந்தது. பிற்பாடு 05 இலட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் சம்பந்தப்பட்ட முறைப்பாடுகளை மேற்கொள்ள கூடியவாறு திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதன்படி கல்முனை அலுவலகத்திலும் ஆரம்பத்தில் 02 இலட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் சம்பந்தப்பட்ட முறைப்பாடுகளையும், பிற்பாடு 05 இலட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட முறைப்பாடுகளையும் மேற்கொள்ள முடிந்தது. இதன்படி 05 இலட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் சம்பந்தப்பட்ட முறைப்பாடுகளை தசாப்த காலமாக பொத்துவில் முதல் கல்முனை வரையிலான பொதுமக்கள் விசேட குற்ற புலனாய்வு பிரிவின் கல்முனை அலுவலகத்தில் மேற்கொள்ள முடிந்தது.
ஆனால் கடந்த ஒரு வருடமாக 05 இலட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் சம்பந்தப்பட்ட முறைப்பாடுகளை விசேட குற்ற புலனாய்வு பிரிவின் கல்முனை அலுவலகத்தில் மேற்கொள்ள முடியாது உள்ளது. மாறாக இவ்வாறான முறைப்பாடுகளை மேற்கொள்ள அம்பாறை பொலிஸ் அத்தியட்சர் அலுவலகத்துக்கு செல்ல வேண்டி உள்ளது. விடயம் தெரியாமல் விசேட குற்ற புலனாய்வு பிரிவின் கல்முனை அலுவலகத்துக்கு இவ்வாறான முறைப்பாடுகளை மேற்கொள்ள வருபவர்கள் அம்பாறை பொலிஸ் அத்தியட்சர் அலுவலகத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்தவும் படுகின்றனர். இதனால் இவ்வாறான முறைப்பாடுகளை மேற்கொள்ள அம்பாறை பொலிஸ் அத்தியட்சர் அலுவலகத்துக்கு செல்ல வேண்டி இருப்பதால் பொது மக்கள் நேர விரயம் உட்பட வீண் சிரமங்களை எதிர்கொள்ள நேர்கின்றது. குறிப்பாக அம்பாறை பொலிஸ் அத்தியட்சர் அலுவலகத்தில் தமிழ் தெரிந்த உத்தியோகத்தர்கள் குறைவு என்பதால் முறைப்பாடுகளை மேற்கொள்வதில் மொழி பிரச்சினை பாரிய இடைஞ்சலாக உள்ளது.
இதே நேரம் விசேட குற்ற புலனாய்வு பிரிவின் கல்முனை அலுவலகத்தின் முழுமையான அதிகாரங்கள் இவ்விதம் மேலிட உத்தரவுக்கு அமைய சூட்சுமமான முறையில் குறைப்பு செய்யப்பட்டு இருப்பதாகவும், கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சரின் பொறுப்பில் இருந்த இவ்வலுவலகம் நுட்பமான முறையில் அம்பாறை பொலிஸ் அத்தியட்சரின் பொறுப்புக்கு மாற்றப்பட்டு இருப்பதாகவும், தமிழ் பேசும் மக்களின் தலை நகரங்களில் இருந்து அரசாங்க அலுவலகங்கள் நாசுக்காக அகற்றப்படுவதற்கு இது நல்ல உதாரணம் என்றும் அரசியல், சமூக, பொது நல செயற்பாட்டாளர்களால் அடையாளம் காணப்பட்டு உள்ளது.
இந்நிலையில் சட்டத்தரணிகளான அன்ஸார் மௌலானா, ரைசுல் ஹாதி போன்றோர் இப்பிரச்சினையை கையாள வேண்டும் என்று கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தை கோரியதை அடுத்து அம்பாறை மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரை இவ்விடயம் தொடர்பில் விரைவில் சந்தித்து பேசுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -