எங்கள் பிரதமர் பெற்றுக் கொடுப்பார் என்பவர்களுக்கு எதற்கு இன்னுமொரு போராட்டம்


- தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் திகாம்பரம்-
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளவிடயம் தொடர்பாக கடந்த காலங்களில் பல போராட்டங்களை நடாத்தி அழுத்தம் கொடுத்த வரலாறு தொழிலாளர் தேசிய சங்கத்துக்கு உரியது. அப்போதெல்லாம் எமது போராட்டத்தை கொச்சைப்படுத்தியவர்கள் தாம் அமைச்சுப்பதவியில் இருந்தால் உடனடியாக ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை அரசாங்கத்துடன் பேசி பெற்றுக் கொடுத்திருப்போம் என்றார்கள். இப்போது தொழிலாளர்களை வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைக்கிறார்கள். எது எவ்வாறானபோதும் நாம் தொழிலாளர் போராட்டங்களை கொச்சைப்படுத்தப்போவதில்லை. அரசியல் நலனுக்கானதாக அல்லாமல் ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளத்தை வெறுவதற்கானதாக அது அமைய வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருக்கும் அடையாள வேலைநிறுத்தத்துக்கு அரசியல், தொழிற்சங்க பேதங்களுக்கு அப்பால் விடுக்கப்பட்டுருக்கும் அழைப்பு தொடர்பாக கருத்து கேட்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காக நாம் எப்போதும் போராடி வந்துள்ளோம். எமது போராட்டம் மூலமான அழுத்தம் காரணமாகவே கடந்த காலங்களில் நாட்சம்பளத் தொகையை கணிசமாக அதிகரித்து செல்ல முடிந்தது. எனினும், இப்போது மலையகத்தில் ஆயிரம் ரூபா சம்பளப்பிரச்சினை வேறு ஒரு பரிமாணத்தைப் பெற்றிருக்கின்றது. கடந்த செப் 23 ம் திகதி நாம் தலவாக்கலை நகரில் அரசியல் தொழிற்சங்க கட்சி பேதங்களுக்கு அப்பால் மேற்கொண்ட போராட்டம்தான் நாடுமுழுவதும் பல்வேறு சமூக மட்டத்திற்கும் நாட்டுக்கு வெளியேயும் கூட எடுத்துச் செல்லப்பட்டு பரவலான கவனத்தைப் பெற்றது. அப்போது எமது போராட்டத்தில் சிறு குழுவே கலந்து கொண்டனர் என்றும் இத்தகைய போராட்டங்களினால் சாதிக்கப் போவது ஒன்றும் இல்லை என எம்மை விமர்சனம் செய்தவர்களே இன்று வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுப்பதன் தாற்பரியத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. எனினும் தொழிலாளர் போராட்டங்களை கொச்சைப்படுத்த போவதில்லை.

ஆனால், தாங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் தமது அரசாங்கத்தின் தலையீட்டுடன் தாம் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தைப் பெற்றுக் கொடுப்போம் என்று கடந்த மூன்று ஆண்டு காலமாக சொல்லி வந்தவர்கள் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் நினைவு நாளான ஒக்டோபர் முப்பது ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தினைப் பெற்றுக் கொடுக்க முடியாவிட்டால் தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகுவோம் என்றவர்கள் அதற்கு மாறாக இப்போது அமைச்சுப்பதவியையே பெற்றுக் கொண்டுள்ளார்கள். ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளத்தைப் பெற்றுக்கொடுக்கவில்லை.
அதேநேரம் அவர்களது பிரதமர் ஆயிரம் ரூபா சம்பள கோரிக்கை நியாயமானது என பாராளுமன்றத்தில் கூறிவிட்டார் என நோர்வூட்டில் கூட்டம் போட்டு அல்லோலப்பட்டார்கள். ஆனால் அந்த பிரதமர் விவசாயிகளுக்கு நன்மை ஏற்படக்கூடிய வரி விலக்கினை அமுல்படுத்தியுள்ளாரே தவிர தோட்டத் தொழிலாளர்கள் சம்பளவிடயம் பற்றி எந்த நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை. அதனால், அவர்களே ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தைப் பெற்றுக்கொடுக்க தாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமே தவிர, தோட்டத் தொழிலாளர்களை போராட்டத்துக்கு அழைக்கும் தருணம் இதுவல்ல. எல்லாம் பேசிவிட்டோம் இதோ வாங்கித்தருவிகிறோம் என்றவர்கள் இப்போதுதான் எங்களது செப்டெம்பர் மாத நிலைப்பாட்டுக்கு வந்துள்ளார்கள் என்பது தெரிகிறது. முதலாளிமார் சம்மேளனத்துடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடாத்தியும் அவர்கள் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை பெற்றுக் கொடுக்க முடியாது என தெரிவித்திருப்பதாகவே ஊடகங்களில் அறியமுடிகின்றது. தொழில் அமைச்சர், திறைசேரி அதிகாரிகள் முன்னிலையிலும் முதலாளிமார் சம்மேளனம் 600/- க்கு மேல் அதிகரிக்க முடியாது என கூறுவதாக கூறும் இவர்களே ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்து அதே நாளில் பேச்சுவார்த்தை நடாத்தி 1000/- அடிப்படை சம்பளத்தை பெற்றுக் கொடுக்கப் போவதாக சொல்வதை நம்பும் படியானதாக இல்லை. இந்த ஆயிரம் ரூபா சம்பளம் எனும் பெயரில் இதற்கு முன்னர் பலமுறை தோட்டத் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். இந்த முறையும் அந்த ஏமாற்றத்தை அவர்கள் அடையக்கூடாது என்பதே எனது பிரார்த்தனையாகும். நாம் எப்போதுமே மக்கள் போராட்டங்களை கொச்சைபடுத்தியவர்கள் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -