கொட்டகலையில் வீட்டு வளவுக்குள் நிறுத்தி வைத்திருந்த முச்சக்கரவண்டியை இனந்தெரியாத நபர்கள் தீயிட்டு கொளுத்திருக்கலாம் என சந்தேகிப்பதாக முச்சக்கரவண்டி உரிமையாளர் தெரிவிக்கின்றார்.
இந்தச் சம்பவம் திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை யதன்சைட் தோட்ட பகுதியில் 19.11.2018 அன்று நள்ளிரவு நேரத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொட்டகலை யதன்சைட் பகுதியில் வசிக்கும் தர்மராஜ் என்பவரின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரின் முச்சக்கரவண்டியே இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளது.
எனினும் 19.11.2018 அன்று காலை வேளையில் பார்த்த போது, முச்சக்கரவண்டி எரிந்த நிலையில் காணப்பட்டதையடுத்து, இது தொடர்பாக பத்தனை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். அத்தோடு தீயினால் குறித்த நபரின் வீட்டு பகுதியும் சிறிதளவு சேதமாகியுள்ளது.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் திம்புள்ள பத்தனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சம்பவம் இடம்பெற்ற வேளையில் வீட்டில் யாரும் இருக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.