அரசாங்கத்துக்கு எதிரான தேசிய எதிர் சக்தியொன்றை கட்டியெழுப்புவதற்கான பேச்சுவார்த்தையொன்று முன்னணி பிக்குகள், தேசிய அமைப்புக்கள் பலவற்றின் தலைவர்கள் மற்றும் கூட்டு எதிர்க் கட்சி உறுப்பினர்கள் ஆகியோரிடையே இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் பதிவு செய்யப்பட்ட கட்சியின் தலைவர் ஒருவரின் வீட்டில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதில், ஹம்பாந்தோட்டையில் பிக்குகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தல் உட்பட பல்வேறு விடயங்கள் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த கலந்துரையாடலின் போது, அரசாங்க எதிர்ப்பு, பிரிவினைவாத அரசியல் யாப்பு, எட்கா உடன்படிக்கை, அரச சொத்துக்களின் விற்பனை, வங்குரோத்து பொருளாதாரம், தேர்தலைப் பிற்போடுதல், மத்திய வங்கி முறி மோசடி, மார்ச்சில் இடம்பெறவுள்ள ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மாநாட்டில் இராணுவத்தை கலந்துகொள்ளச் செய்தல் போன்ற அம்சங்களை முன்வைத்து இந்த எதிர்ப்புச் சக்தி உருவாக்கப்படுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த எதிர் சக்தி அமைப்பின் ஏற்பாட்டாளராக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸும், தேசிய ஒருங்கிணைப்பாளராக ரியல் அட்மிரால் சரத் வீரசேகரவும், அரசியல் கட்சிகளின் ஒருங்கிணைப்பாளராக முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த எதிர் சக்தி ஜனவரி இறுதியில் மக்கள் மயப்படுத்தப்படவுள்ளதாகவும் இதற்காக நுகேகொட நகரில் பாரிய கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்படவுள்ளதாகவும் அவ்வமைப்பு தீர்மானித்துள்ளது.