மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு சுமார் 50 மீற்றர் அருகிலிருந்த தொலைத் தொடர்பு சாதனங்கள், அதன் உதிரிப் பாகங்கள் விற்பனை நிலையம் வெள்ளிக்கிழமை அதிகாலை (13.01.2017) உடைத்து திருடப்பட்டமை தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டிருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம்பற்றி மேலும் தெரிய வருவதாவது; மேற்படி விற்பனை நிலையத்தின் உரிமையாளர் வழமை போன்று வியாழக்கிழமை இரவு 9.35 மணியளவில் விற்பனையை நிலையத்தை மூடி விட்டு வீடு சென்றுள்ளார்.
அதேவேளை, வெள்ளிக்கிழமை அதிகாலை 3.37 மணியளவில் அவரது கைப்பேசிக்கு கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி காணொளிக் கமெராவிலிருந்து எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டுள்ளது.
அத்துடன் விற்பனை நியைலத்தின் முன்னாலும் பின்னாலும் பொருத்தப்பட்டிருந்த காணொளிக் கமெராக்கள் இயங்காமற் போயுள்ளன.
விபரீதம் நடந்து விட்டதை அறிந்து கொண்ட உரிமையாளர்; உடனடியாக விற்பனை நிலையத்திற்கு வந்து பார்த்தபோது திருடர்கள் விற்பனை நிலையத்தின் பின்புறத்தால் பாய்ந்தோடி மரமொன்றில் ஏறி மறைந்திருப்பது தென்பட்டுள்ளது.
உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு பொலிஸாரும் இணைந்து தப்பியோடிய திருடர்களைத் துரத்திச் சென்றபோது சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக் கட்ட விசாரணைகளின் போது திருட்டுக் குடும்பல் இது போன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் பல இடங்களில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
மேலும் கைது செய்யப்பட்டவர்கள் பதுளை வீதி, சின்னப்புல்லுமலை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் கடந்த டிசெம்பரில் க.பொ.த சாதார தர பரீட்சைக்குத் தோற்றியவர்கள் என்றும் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
தொலைத் தொடர்பு விற்பனை நிலையத்தில் இருந்து திருடப்பட்ட தொலைபேசி, மீள் நிரப்பு அட்டைகள், பணம் என்பவனவற்றில் சுமார் 67 ஆயிரம் ரூபாய் பெறுமதியானவை மீட்கப்பட்டதாக விற்பனை நிலைய உரிமையாளரான எஸ்.எம். நழீம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட குற்றத் தடுப்புப் பொலிஸாரும் ஏறாவூர் பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.