பாலமுனை அஷ்ரப் வித்தியாலயத்தில் கணித பாட ஆசிரியர் ஒருவருக்கு பதிலீடு இன்றி தற்காலிக இடமாற்றம் வழங்கப்பட்டதை தொடர்ந்து குறித்த இடமாற்றத்தை ரத்து செய்யும் படி கோரி 2016.05.19 இன்று அஸ்ரப் வித்தியாலயத்தின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வீதியில் இறங்கி கவனயீர்ப்பு ஆர்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
இது தொடர்பாக காலையில் தகவலறிந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்கள் உடனடியாக ஆர்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு விஜயம் செய்து பிரச்னை தொடர்பாக கேட்டறிந்தார்.
மேலும் மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி பணிப்பாளர் அவர்களை தொடர்பு கொண்டு பிரச்சனை தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அவர்கள் எடுத்து கூறினார்.
வலயக் கல்விப் பணிப்பாளர் திருகோணமலையில் இருப்பதனால் உடனடியாக உதவி வலயக்கல்வி பணிப்பாளரை குறித்த இடத்திற்கு அனுப்பிவைத்ததுடன் இப்பிரச்சினயை நிவர்த்தி செய்வதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கையை கவனத்தில் எடுப்பதாகவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு உத்தரவாதம் அழித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்தது சென்றனர்.
இதனைத்தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக்...
மாணவர்கள் இந்த சமூகத்தில் நாளைய தலைவர்களாக ஒழுக்கமுள்ளவர்களாக உருவாக வேண்டியவர்கள். இவ்வாறான ஆர்பட்டங்களில் மாணவர்களை ஈடுபடுத்துகின்றமையை நான் அவர்களின் ஒழுக்கத்தை திசை திருப்புகின்ற ஒரு நிகழ்வாகவே பார்கின்றேன்.
இவ்வாறான பிரச்சனைகளின் போது பெற்றோர்கள் வீதிகளில் இறங்கி ஆர்பாட்டங்களில் ஈடுபட்டாலும், மாணவர்களை இத்தகைய நிகழ்வுகளுக்கு பழக்கப்படுத்துகின்றமையானது அவர்களை பிரச்சனைகள் நிகழ்கின்ற ஒவ்வொரு சந்தர்பத்திலும் அதிபருக்கு எதிராக, ஆசிரியருக்கு எதிராக, நிருவாகத்திற்கு எதிராக என்று ஆர்பாட்டங்களில் ஈடுபடுவதற்கு தூண்டும். இதனால் நல்லொழுக்கமுள்ள சமுதாயம் ஒன்றை உருவாக்குவது கேள்விக்குறியாக அமைந்துவிடும். எனவே எந்தவொரு சந்தர்பத்திலும் எமது மாணவர்களை இத்தகைய ஆர்பாட்டங்களில் ஈடுபடுத்தக்கூடாது.
மேலும் பிரச்சனைகள் எழுகின்ற போது இவ்வாறான ஆர்பாட்டங்களை முன்னெடுப்பதற்கு முன்னர் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் மூலமாக சுமூகமான தீர்வுகளை பெற்றுக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.