ஏறாவூர் நிருபர்,ஏஎம் றிகாஸ்-
வவுனியா-உக்குளாங்குளம் பாடசாலையின் 13 வயதுடைய மாணவச்சிறுமி கங்காதரன் ஹரிஷ்னவி பாலியல் வன்புணர்விற்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்கள் இன்று 26.02.2016 காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிழக்குப் பல்கலைக் கழகத்தின் மட்டக்களப்பு வந்தாறுமூலை வளாகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிறுமியன் கொலையினைக் கண்டிக்கும் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஆர்ப்பாட்டம் மாணவர்கள் ஏந்தி நின்று கோஷமிட்டனர்.
கிழக்குப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ; அனைத்து பீட மாணவர்களும் கலந்துகொண்டனர்.
'வித்தியாவுக்கு நீதி கிடைத்திருந்தால் நித்தம் ஒரு சிறுமி செத்திருக்கமாட்டாள்'
'மைத்திரி ஆட்சியில் கற்புக்கு நீதி எங்கே?'
'நல்லாட்சியில் பாலியலுக்கு அங்கீகாரமா?'
'அன்று மர்ம மனிதர்கள் இன்று காமுகர்கள்'
' சில்லறைக்காய் அரசு சிறுமிகளை விற்காதே' என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவண்ணம் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


