ஒருவரையொருவர் வெறுத்து ஒதுக்கும் குரோத அரசியல் மனப்பான்மை இல்லாதொழிக்கப்பட வேண்டும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துக்கோறள தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி, நிவித்திகல பிரதேச செயலக அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நாடாளுமன்றத்தில் அனைவரையும் வெறுக்கும், சகலரையும் விமர்சிக்கும் ஒருவர் இருக்கின்றார். இன்றைக்கு அவர் வெளிநாடு செல்ல முயன்றபோது பல்வேறு காரணங்களால் அவரது பயணம் தடைப்பட்டுள்ளது.
ஆனால் எங்கள் ஜனாதிபதியும், பிரதமரும் அவர் மீது கருணை கொண்டு அவரது பயணத்தைத் தொடர அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். இதுதான் மனிதாபிமானம். அரசியலிலும் , தனிப்பட்ட வாழ்விலும் இதனைத் தான் வளர்த்தெடுக்க வேண்டும்.
ஒருவரையொருவர் வெறுக்கும், விமர்சிக்கும் அரசியல் கலாசாரம் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். அதன் மூலம் எங்களை நாங்களே அழித்துக் கொள்ளும் யுகத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும்.
தற்போது நீதிமன்றத்தின் சுதந்திரம் பாதுகாக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பிரதமர் ஒருவருக்கு எதிராக நீதிமன்ற தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட வரலாறு எமது அரசாங்கத்தில் மட்டுமே நடந்துள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நீதித்துறைக்கு அந்தளவு சுதந்திரத்தை வழங்கியுள்ளார் என்றும் அமைச்சர் தலதா அத்துக்கோறள தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
