ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மட்டக்களப்புக்கான விஜயம் திடீரென ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் மிக மோசமான காலநிலை காரணமாகவே இவ் விஜயம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மங்களராமய பௌத்த விகாரை, மட்டக்களப்பு வீரகத்தி பிள்ளையார் ஆலயம், மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்மா பள்ளிவாசல் மற்றும் மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயம் ஆகியவற்றுக்குச் சென்று பிரார்த்தனை மற்றும் சமய நிகழ்வுகளில் ஜனாதிபதி இன்று கலந்துகொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், பருவகால அடைமழை பெய்யத் தொடங்கியிருப்பதால் ஜனாதிபதியின் விஜயம் திட்டமிட்டபடி இடம்பெறுமா என்ற கேள்விகளும் முன்னரே எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பல பகுதிகளில் பாரிய சேதங்கள் ஏற்படுத்தப்பட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை நிலைமைகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
அந்தவகையில் மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தின் புளியடி வீதியில் அமைந்துள்ள பாலம் ஒன்று தொடர் மழை காரணமாக முற்றாக சேதம் அடைந்துள்ளது. இதனால் அவ்வழியால் மக்கள் எவரும் பயணிக்க முடியாத நிலையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



