பொதுபல சேனா அமைப்பின் நடவடிக்கைகளினால் அரசாங்கத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஊவா மாகாணசபைத் தேர்தலின் போது ஆளும் கட்சிக்கான சிறுபான்மை மக்களின் ஆதரவு வீழ்ச்சியடைந்துள்ளது.
பொதுபல சேனா அமைப்பின் நடவடிக்கைகள் இந்த பின்னடைவிற்கு முக்கியமான காரணியாக அமைந்துள்ளது. வறட்சியைப் பயன்படுத்திக்கொண்டு மக்களை ஆத்திரமூட்ட வைக்க ஐக்கிய தேசியக் கட்சி முயற்சித்தது.
இவ்வாறான ஓர் நிலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு பெரும்பான்மையான மக்கள் வாக்களித்தமை வரவேற்கப்பட வேண்டியதாகும். எனினும், சிறுபான்மை மக்கள் ஆளும் கட்சிக்கு வாக்களிக்கத் தவறியுள்ளனர்.
குறிப்பாக முஸ்லிம் மக்களின் ஆதரவு வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கு பொதுபல சேனா அமைப்பின் செயற்பாடுகளே பிரதான காரணியாகும். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வாக்குகளையே ஜே.வி.பி பெற்றுக்கொண்டுள்ளது.
கடந்த கால மாகாணசபைத் தேர்தல்கள் மற்றும் ஜனாதிபதிக்கு காணப்படும் பிரபல்யம் ஆகியவற்றை கருத்திற்கொண்டால், ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கட்சிக்கு வெற்றியீட்ட முடியும்.
எனினும் ஜனாதிபதி முறைமை இல்லாமல் செய்யப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். ஜனாதிபதி நாடாளுமன்றிற்கு வரவேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பாகும் எனவும் அதற்கு ஆதரவளிக்கப்படும் எனவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தேசிய மொழிகள் அமைச்சில் அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் வாசுதேவ நாணயக்கார இதனைத் தெரிவித்துள்ளார்.
சொத்து குவித்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும்
இலங்கையிலும் அரசியலுக்கு வந்து செல்வந்தர்களாகி சொத்து குவித்தவர்களை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டுமென அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
இந்தியாவில் ஜனநாயகம் உயர்ந்த நிலையில் உள்ளது. இதனை மதிக்கின்றேன் என்றும் அமைச்சர் தெரிவித்தார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை தொடர்பில் கேட்டபோதே சமூக ஒருமைப்பாடு மற்றும் தேசிய மொழிகள் தொடர்பான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கையில்;
ஜெயலலிதாவுக்கு வழங்கிய தீர்ப்பானது இந்தியாவின் சட்டங்களுக்கு அடிப்படையில் அமைந்தது. அது தொடர்பில் விவாதிக்க முடியாது. ஆனால் இதுபோன்ற அதிரடியான நடவடிக்கைகள் இலங்கையிலும் எடுக்கப்பட வேண்டும்.
எநந்தவிதமான வசதிகளும் இல்லாமல் அரசியலுக்கு வந்து திடீரென செல்வந்தர்களாகியோர் மற்றும் சொத்துக்களை குவித்தோர் தொடர்பில் ஆராயப்பட வேண்டும்.
மக்களின் பணத்தை கொள்ளையடிக்க இடமளிக்க முடியாது. எனவே, அரசியலுக்கு வந்து சொத்து குவித்தோர் தொடர்பில் விசாரணைகளை முடக்கி விட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.
சொத்துக்குவித்தோர் பெரும்பாலானோர் இங்குள்ளனர்.ஆனால், இங்கு அதுபோன்றதொரு நிலைமை இல்லாமல் இருப்பது கவலையளிக்கின்றது.
ஜனநாயகம்
இந்தியாவின் ஜனநாயகம் மிகவும் உயர்ந்த நிலையில் உள்ளது. இதனை நான் மதிக்கின்றேன். விசேடமாக அங்குள்ள அரச ஊடகங்கள் எதுவிதமான பக்கச்சார்பும் இல்லாமல் சுயாதீனமாக இயங்குகின்றன.
அனைவருக்கும் சம வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றன. அங்கு சட்டம் பதவிகளை கணக்கிலெடுப்பதில்லை என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

0 comments :
Post a Comment