ஜெயலலிதாவை பார்வையிட சிறைக்கு சென்ற புதிய முதல்வர்

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்தும், ஜாமீன் வழங்க கோரியும் கர்நாடக ஐகோர்ட்டில் ஜெயலலிதா சார்பில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதேபோல சசிகலா, சுதாகரன், இளவரசி சார்பிலும் தனித்தனியே ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இவர்கள் சார்பில் வக்கீல்கள் வேணுகோபால், அம்ஜத் பாஷா, செந்தில், பன்னீர் செல்வம், சீனிவாசன், திவாகர், மூர்த்திராவ், அன்புக்கரசு, அசோகன் ஆகியோர் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

செப்டம்பர் 29–ந்தேதி முதல் அக்டோபர் 5–ந்தேதி வரை கர்நாடக ஐகோர்ட்டுக்கு தசரா விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் விடுமுறை கால அமர்வு முன் இன்று இந்த மனுக்கள் விசாரணைக்கு வருகிறது.

காலை 10.15 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே விடுமுறை கால அமர்வு செயல்படும். இதை கருத்தில் கொண்டு ஜாமீன் மனுக்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்டன. விடுமுறை கால நீதிபதிகள் எஸ்.அப்துல் நசீர், அரவிந்த் குமார், ரத்னகலா ஆகியோரில் ஒருவர் ஜெயலலிதாவின் ஜாமீன் மனுக்களை விசாரிப்பார்.

இந்த மனுக்கள் இன்று கர்நாடக ஐகோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. அப்போது ஜெயலலிதா தரப்பில் மூத்த வக்கீல் ராம்ஜெத் மலானி ஆஜராகிறார்.

இதற்காக அவர் நேற்று பெங்களூர் வந்தார். அங்கு அவர் ஜெயலலிதா தரப்பு வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தினார்.

சசிகலாவுக்காக பிரபல மும்பை வக்கீல் அமீத்தேசாய் கர்நாடக கோர்ட்டில் ஆஜராகி வாதாடுகிறார்.

ஜெயலலிதாவுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டி உள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு குற்றச்சாட்டு தவறானது, சட்டப்படிதான் அவர் சொத்துக்கள் வாங்கினார். எனவே அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை வலியுறுத்தி ராம் ஜெத்மலானி வாதாடுகிறார். ஜெயலலிதா தரப்பு நியாயங்களை எடுத்துரைக்கிறார்.

ஜாமீன் மனு விசாரணையின் போது அரசு தரப்பு வக்கீல் பவானி சிங்கும் ஆஜராகப் போவதாக தெரிவித்து இருந்தார். எனவே அவரும் இன்று ஆஜராகிறார். பதில் மனு தாக்கல் செய்ய அவர் கால அவகாசம் கோருவார் என்று தெரிகிறது.

எனவே ஜாமீன் மனு விசாரணை தள்ளி வைக்கப்படலாம் என்றும் அதுவரை ஜெயலலிதாவுக்கு வேறு இடத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்க அனுமதி கோரப்படும் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே தமிழக முதல்–அமைச்சராக பதவி ஏற்ற ஓ.பன்னீர்செல்வம் உடனடியாக விமானம் மூலம் பெங்களூர் புறப்பட்டுச் சென்றார்.

அவருடன் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், டாக்டர் விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, பி.வி.ரமணா, வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்டோரும் சென்றனர்.

பெங்களூர் சர்வதேச விமான நிலையத்துக்கு இரவு 8 மணிக்கு போய்ச் சேர்ந்தனர். ஜெயிலில் இருப்பவர்களை மாலை 6 மணி வரைதான் பார்க்க முடியும் என்பதால் ஓ.பன்னீர்செல்வம் உடனடியாக ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை.

இதையடுத்து பெங்களூர் ஓட்டலில் தங்கிய அவர் ஜெயலலிதாவின் ஜாமீன் மனுக்கள் பற்றி வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இன்று காலை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் ஜெயலலிதாவை சந்திப்பதற்காக பெங்களூர் பரப்பன அக்ரகாரா சிறை வளாகத்துக்கு சென்றனர்.

அங்கு ஜெயலலிதாவை சந்திப்பதற்கு சிறை அதிகாரிகளிடம் முறைப்படி அனுமதி பெற்று சந்திக்கிறார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :