முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள பெளத்த மக்களை தூண்டிவிட்டு பெளத்த - முஸ்லிம் கலவரமொன்றை நாட்டில் ஏற்படுத்தவே பொதுபலசேனா உள்ளிட்ட சில பெளத்த அமைப்புகள் முயற்சிக்கின்றன. பெளத்தத்திற்கு எதிரான யுத்தத்திற்கு நாம் ஒருபோதும் தயாரில்லை என தெரிவிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், பொதுபலசேனாவின் அராஜக நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை உடனடியாக தெரிவிக்க வேண்டும் எனவும் குறிப்பிடுகிறது.
இலங்கையில் முஸ்லிம் வஹாபி வாதம் தலைதூக்குவதாகவும் இலங்கையை தனி பெளத்த சிங்கள நாடாக மாற்றியமைப்போம் எனவும் பொதுபலசேனா தனது சங்க சம்மேளன மாநாட்டில் தெரிவித்துள்ள நிலையில்இ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கருத்தினை வினவிய போதே அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;
இலங்கையில் பெளத்த முஸ்லிம் உறவு முறை நீண்ட காலமாகவே நிலைத்து வருகின்றது. எனினும் அண்மைய காலங்களில் ஒரு சில பெளத்த சிங்கள இனவாத அமைப்புகளின் செயற்பாடுகள் இஸ்லாமிய சமூகத்தை அச்சமடைய வைத்துள்ளன. குறிப்பாக பெளத்த சிங்கள அமைப்புகள் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக அணி திரள்வதும் மாநாடுகளில் பகிரங்கமாக முஸ்லிம் சமூகத்தினை அவமதிப்பதும் ஒரு சில குறுகிய நோக்கங்களுக்காகவே. முஸ்லிம் சமூகத்தினையும் இலங்கையில் சிங்கள பெளத்த மக்களுக்கெதிராக போராட வைக்கவும் இலங்கையில் சிங்கள முஸ்லிம் இனக்கலவரமொன்றினை ஏற்படுத்தி நாட்டில் அமைதியை சீர்குலைக்கவுமே இவைகள் முயற்சிக்கின்றன.
எனினும் இலங்கை முஸ்லிம்கள் ஆயுதமேந்தவோ அல்லது பெளத்தத்திற்கு எதிராக போராடவோ ஒருபோதும். தயாரில்லை. நாம் அமைதியை விரும்பும் சமூகம். எமக்கு இனவாத செயற்பாடுகள் எவையும் ஒத்துப்போகாது. பொய் பிரசாரங்களை மேற்கொள்வதனாலும் எம்மை தொடர்ச்சியாக அவமதிப்பதாலும் இலங்கையில் அமைதியின்மையே ஏற்படும்.
அதேபோல் பொதுபலசேனாவினர் முஸ்லிம் அமைப்புகளையும் முஸ்லிம் சமூகத்தினையும் போராட்டத்திற்கு தூண்டுவதும் எம்மை விவாதங்களுக்கு அழைப்பதனையும் பொருட்படுத்துவதோ அல்லது அவர்களுக்கு பதில் கருத்தினை குறிப்பிடுவதோ முரண்பாடுகளையே அதிகரிக்கும் மாறாது அமைதியினை ஏற்படுத்த முடியாது. எனவேஇ நாம் ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடமுமே எமது கேள்வியை கேட்க வேண்டியுள்ளது.
எனவே, பொதுபலசேனா பெளத்த அமைப்பின் இனவாத செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டினை உடனடியாக தெரிவிக்க வேண்டும். இனவாத செயற்பாடுகளுக்கு அரசு இடம் கொடுக்கின்றதா அல்லது இவ் அமைப்புகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கின்றதா என்பதை அரசாங்கம் உடனடியாக எமக்கு தெரிவிக்க வேண்டும்.என்றும் கூறினார்.
.jpg)
0 comments :
Post a Comment