ஊவா மாகாண சபைத்தேர்தலை இரண்டு தினங்கள் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிடுவதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று செவ்வாய்கிழமை சபையில் குற்றம் சாட்டினார்.
இக்குற்றச்சாட்டை நிராகரித்த அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஸ்குணவர்தன; தேர்தலை ஒத்திவைக்கும் அதிகாரம் அரசுக்குக் கிடையாது. அந்த அதிகாரம் தேர்தல்கள் ஆணையாளருக்கே உள்ளதாகவும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின்போது எழுந்த எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்ட கேள்வியை எழுப்பினார்.
சபையில் எதிர்கட்சி தலைவர் தொடர்ந்து கேள்விகளை முன் வைக்கையில்;
ஊவாவில் குழப்பகரமான சூழ்நிலைகளை தோற்றுவித்து அதனைக் காரணம் காட்டி மாகாண சபைத்தேர்தலை இரண்டு தினங்கள் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இத்தேர்தலில் 2,50,000 வாக்குகளால் வெற்றி பெறுவோம் எனக்கூறும் அரசு ஏன் இவ்வாறான நிலைமையை ஏற்படுத்த வேண்டும்.
எனவே, ஊவாவில் பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கையை அதிகரித்து பாதுகாப்பை உறுதி செய்ய அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இதற்கு ஆதரவு வழங்க நாம் தயாராகவுள்ளோம். வன்முறைகள் இடம்பெறுவதை தடுப்பது அரசின் கடமையாகும்.
மாநாடு இங்கு நடைபெறவுள்ள நிலையில் இவ்வாறு தேர்தலை நடத்துவதும் வன்முறைகளை ஏற்படுத்தும் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, இவ்விடயம் தொடர்பில் இரு தரப்பினரும் பேசி முடிவு செய்வோம் என்றார் எதிர்கட்சி தலைவர்.
இதற்கு பதிலளித்த தினேஷ் குணவர்த்தன தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசுக்கு அதிகாரம் இல்லை. அந்த அதிகாரம் தேர்தல் ஆணையாளருக்கே உள்ளது. எனவே, எதிர்கட்சித் தலைவர் இவ்விடயத்தை தேர்தல் ஆணையாளரிடமே தெரிவிக்க வேண்டும்.
அதேவேளை, ஐ.தே கட்சி இத்தேர்தலில் தோல்வியடையும். அதனை ஏற்றுக்கொள்ள அக்கட்சித் தயாராக வேண்டும் என்றார்.
இதன்போது குறுக்கிட்ட எதிர்கட்சித்தலைவர்;
தேர்தலின் பின்னர் வெற்றி, தோல்வி தொடர்பில் பார்த்துக்கொள்வோம். அதற்கு முன்பு ஊவாவில் பாதுகாப்பை உறுதிப்படுத்தி தேர்தலை நடத்துங்கள்.
இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளரையும் வலியுறுத்துவோம் என்றார்.
இதன்போது, அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, பாதுகாப்பை ஸ்திரப்படுத்தியுள்ளோம். எனவே, அதிகளவிலான படையினரின் பிரசன்னம் தேவையில்லையென்றார்.
அத்தோடு உத்தேச உள்ளூராட்சி சபைத்தேர்தல்கள் திருத்தம் தொடர்பில் கட்சித்தலைவர்களுடனான பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டுமென்று எதிர்கட்சி தலைவர் அரச தரப்பிடம் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அடுத்த மாதம் இத்திருத்தம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதால் எதிர்வரும் 20ம் திகதிக்கு பிறகு இது தொடர்பில் கட்சி தலைவர்கள் கூட்டம் நடத்தப்படுமென்று தெரிவித்தார்.

0 comments :
Post a Comment