பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் அமைச்சர் திஸ்ஸ விதாரணவுக்கே இடமில்லாத நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பை வெளிநாடு செல்ல வேண்டாமென அவர் கோருவதில் என்ன நியாயம் உள்ளதென ஹஸன் அலி கேள்வியெழுப்பியுள்ளார்.
தீர்வு விடயத்தில் வெளிநாட்டு மோகத்தை கைவிட்டு உள்நாட்டுப் பொறிமுறையில் நம்பிக்கை வைத்து கூட்டமைப்பு பொறுப்புடன் செயற்பட வேண்டுமென அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளது குறித்து கருத்து வெளியிட்டபோது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் எம்.பியுமான ஹஸன் அலி இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில், தீர்வுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவுக்குச் சென்றமை தவிர்க்க முடியாத விடயமாகியுள்ளது.
தீர்வுக்காக வெளிநாடு செல்ல வேண்டாமெனக் கூறும் அமைச்சர் திஸ்ஸ விதாரண தலைவராக இருந்த அனைத்து கட்சிப் பிரதிநிதிகள் கூடி தயாரித்த அறிக்கைக்கு என்ன நடந்துள்ளதென்பதே தெரியாதுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் கிழக்கில் அரசாங்கத்தால் ஆட்சியமைக்க முடிந்தது. தமிழ், முஸ்லிம் மக்கள் அரசாங்கத்துக்கு எதிரான கருத்திலுள்ளனர்.
பெரும்பான்மையினர் என்பது சிறுபான்மையினரை அடக்கி ஆள்வதல்ல. இனங்களுக்கிடையில் சுமுகமான உறவு காணப்படும் போது அதனை இல்லாமல் செய்பவர்களுக்கு எதிராகவே பெரும்பான்மை பலம் பாவிக்க வேண்டும். பெரும்பான்மை என்பது சிறுபான்மையை நசுக்குவதல்ல. இது ஜனநாயகமுமல்ல. பிழையான அணுகுமுறையினால் நாளுக்கு நாள் நிலைமை கட்டுமீறிச் செல்கின்றது.
இதனால் புதுப்புது அமைப்புக்களும் மதவிவகாரம் தொடர்பில் பிரச்சினைகளும் வருகின்றன. சமூகங்களைக் கூறுபோட்டுக் குளிர்காய எண்ணுபவர்களுக்கு அதனாலேயே ஆபத்து ஏற்படும். இது முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்கவுக்கு ஏற்பட்டது என ஹஸன் அலி கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment