அரசாங்கத்தை தோற்கடிக்கும் தேவை ஐ.தே.கட்சிக்கும் உள்ளதா? மனோ கேள்வி

ரசாங்கத்தை தோற்கடிக்கும் தேவை தமிழ், முஸ்லிம் மக்களுக்கு உள்ளது போன்று பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இருக்கிறதா? என ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவரும் மேல் மாகாண சபை உறுப்பினருமாகிய மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார். 

கொழும்பில் இன்று (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றி அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார். 

அவர் அங்கு மேலும் கூறுகையில், 

இந்த அரசு இன்று வாக்குறுதிகளை மீறுவதில் உலக சாதனை செய்துள்ளது. உள்நாட்டில் நமது மக்களை மட்டுமல்ல, வெளிநாட்டிலும் அது உலக அரசுகளை ஏமாற்றுகிறது. இந்த கொடுங்கோல் அரசை தோற்கடித்து, வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதில் வேறு எவரையும் விட தமிழ், முஸ்லிம் மக்களுக்கே அதிக தேவை உள்ளது. 

ஆனால், இந்த தேவை பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்கு இருக்கின்றதா என்ற கேள்வியும், ஐதேகவின் ஊவா முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கியுள்ள ஹரின் பெர்னாண்டோவுக்கு இருக்கின்ற துணிச்சலும், அர்ப்பணிப்பும் இக்கட்சியின் ஏனைய பிரமுகர்களுக்கு இருக்கின்றதா என்ற கேள்வியும் இன்று எழுந்துள்ளன. 

இதனால்தான், எதிர்வரும் தேர்தல்களில், குறிப்பாக ஜனாதிபதி தேர்தலில், தமிழ், முஸ்லிம் மக்கள் கண்ணை மூடிக்கொண்டு, எந்தவித நிபந்தனையும் இல்லாமல், தமக்கு வாக்களிப்பார்கள் என ஐதேக எதிர்பார்க்ககூடாது என இங்கே கூட்டமைப்பு எம்பி சுமந்திரன் கூறுகிறார். தேசிய ஐக்கிய முன்னனி தலைவர் அசாத் சாலியும் கூறுகிறார். அதையே நானும் கூறுகின்றேன். 

கூட்டமைப்புடன் நேரடி பேச்சுக்கு தயார் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறுகிறார். இது நல்லது. ஆனால், இதுவும் புதிய விடயம் அல்ல. தமிழ் கட்சிகள் இந்தியாவுக்கு போய் வந்தால், அதை கண்டித்து, இந்தகைய அழைப்பு விடுப்பது இலங்கை அரசுக்கு வழமையாக போய் விட்டது. இதற்கு முன்னர் ஏறக்குறைய 18 முறைகள் இந்த மகிந்த அரசுடன், கூட்டமைப்பு நேரடி பேச்சுகளை நடத்தி களைத்து போய் இருக்கிறது. 

முதலில், வாருங்கள், நமது அரசுடன் பேசுங்கள் எனக்கூறி எழுத்து மூலம் கூட்டமைப்புக்கு, இந்த அரசு அழைப்பு விடுத்தது. அதை நம்பி கூட்டமைப்பு பேச்சுவார்த்தைக்கு போனது. ஆனால், ஒரு கட்டத்தில் இந்த அரசு, நடைபெற்றுகொண்டிருந்த பேச்சுவார்த்தைகளை, பேசவந்த கூட்டமைப்புக்கும் சொல்லாமல், “கூட்டமைப்பு-அரசாங்க பேச்சு” என்ற மட்டத்தில் இருந்து “கூட்டமைப்பு-ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பேச்சு” என்ற மட்டத்துக்கு இரகசியமாக தரம் குறைத்தது. 

இது ஒரு மோசடி இல்லையா? இது இன்று பேச அழைக்கும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கு தெரியாதா? இன்றும் அவர் கூட்டமைப்பை அழைப்பது இலங்கை அரசுடன் பேசுவதற்கா அல்லது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் பேசுவதற்கா என செய்தியாளர்கள்தான் கேட்டு சொல்லவேண்டும். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் பேசிவிட்டீர்கள். இனி நாங்கள் அதை பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு கொண்டு சென்று ஏனைய கட்சிகளுடன் பேசுவோம் என காலத்தை இழுத்தடிக்கவா இந்த அழைப்பு என விளக்கம் வேண்டும். 

இத்தகைய முறையில் முன்னுக்கு பின் முரணாக பேசும் அரசைதான் நாம் வீட்டுக்கு அனுப்ப விளைகிறோம். நாம் இதில் நேர்மையாக செயல்படுகிறோம். எமது பாதையில் தடுமாற்றம் இல்லை. தடுமாறுபவர்களுக்கும், தமிழ் தேசியம், முஸ்லிம் தேசியம் என்பவற்றை இனவாதம் என்று அர்த்தப்படுத்த நினைக்கும் முட்டாள்களுக்கும் இங்கு இடமில்லை. 

ஐக்கிய தேசிய கட்சியுடன் நாம் நெருங்கி செயல்படுகிறோம். இந்த கட்சி பிரதான பெரும்பான்மை கட்சி. இந்த அரசு வீழ்த்தப்பட்டு புதிய அரசு உருவானால், அதில் ஐதேக முக்கிய இடம் வகிக்கும். இது அனைவருக்கும் தெரியும். ஆனால், இந்த ஐதேகவினால் மாத்திரம் இந்த அரசை வீழ்த்த முடியாது. குறிப்பாக ஜனாதிபதி தேர்தலை வெற்றிக்கரமாக சந்திக்க அனைத்து எதிரணியினரையும் ஐதேக கவர வேண்டும். சோபித தேரர், ஜேவிபி, சரத் பொன்சேகா ஆகியோர் என்ன சொல்கிறார்கள் என்பதை ஐதேக கவனிக்க வேண்டும். 

இந்நாட்டு தமிழ், முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் என்ன சொல்கின்றன என்பதை ஐதேக கவனிக்க வேண்டும். இல்லாவிட்டால் வீழ்வது ஐதேக மட்டுமல்ல, முழு நாடும் என்பதை இவர்கள் உணர வேண்டும். அரசாங்கத்தை நடத்தி தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் ஆளும் கட்சியும், இந்த அரசை வீழ்த்தி, புதிய அரசை உருவாக்குவதில் பிரதான எதிர்கட்சியும் இன்று பொறுப்பற்று செயல்படுகின்றன. ஆகவே நாங்கள் வெளிநாடுகளைதான் நாடவேண்டியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :