கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர அதிகாரியான ஏ.ரி.எம். றாபி நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவினால் திங்கட்கிழமை (15) இந்த நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டது.
உள்ளூராட்சி நிர்வாகத் துறையில் நீண்டகால அனுபவமும் நிர்வாகத் திறனும் கொண்ட அதிகாரியான ஏ.ரி.எம். றாபி, கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கல்முனை மாநகர சபையின் ஆணையாளராக கடமையாற்றி வந்தார். அவரது சிறந்த நிர்வாகச் சேவைகள் மற்றும் ஆற்றல்களை கருத்திற் கொண்டு இப்பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னர் அவர் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளராகவும், அக்கரைப்பற்று மாநகர சபையின் ஆணையாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் பல்வேறு உள்ளூராட்சி நிறுவனங்களில் நிர்வாகப் பொறுப்புகளை வகித்து, உள்ளூராட்சி சேவைகளை மேம்படுத்துவதிலும் மக்களுக்கான சேவைகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளை ஒருங்கிணைத்தல், நிர்வாகத் திறனை மேம்படுத்தல், உள்ளூராட்சி சேவைகளை மக்கள் மையப்படுத்திய வகையில் முன்னெடுத்துச் செல்லல் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் வகிப்பார். அந்த வகையில், துறையின் செயற்பாடுகள் மேலும் வலுப்பெறுவதற்கும், உள்ளூராட்சி நிர்வாகத்தில் புதிய முன்னேற்றங்கள் ஏற்படுவதற்கும் அவரது நியமனம் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூராட்சி நிர்வாகத் துறையில் விரிவான அனுபவமும் செயற்பாட்டு அறிவும் கொண்ட ஏ.ரி.எம். றாபி, கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டிருப்பது மாகாணத்தின் உள்ளூராட்சி நிர்வாகத்திற்கும் சேவை வழங்கல் கட்டமைப்பிற்கும் கிடைத்துள்ள முக்கிய பலமாகக் கருதப்படுவதுடன், அவரது தலைமையில் துறையின் செயற்பாடுகள் மேலும் சிறப்புறும் என பல்வேறு தரப்பினரும் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

0 comments :
Post a Comment