இந்துமா சமுத்திரத்தின் மத்தியில் முத்தெனத்திகழும் இலங்காபுரியின் கிழக்கு மாகாணத்தின் மட்டுமா நகரின் தென்பால் செந்நெல் விளையும் செழிப்பான வயல் நிலமும், வங்ககடலலையின் தாலாட்டில் திகழும் சைவப்பழம் பெரும் கிராமமாம் காரைதீவில் கோயில் கொண்டு அருளாட்சி செய்கின்ற வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ பாலையடி வாலவிக்கினேஸ்வர பெருமானின் வருடாந்த மஹோற்சவ பெருவிழாவானது இன்று ( 22) திங்கட்கிழமை பகல் 12.05 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.
இப் பெருவிழா தொடர்ந்து பத்து தினங்கள் திருவிழா இடம்பெற்று செப்டம்பர் 01 ஆம் திகதி வியாழக்கிழமை தீர்த்த உற்சவத்துடன் இனிதே நிறைவு பெறும்.
ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் தலைமையில் கிரியைகள் நடைபெறும்.
இன்று (22) திங்கட்கிழமை காலை மாவடி கந்த சுவாமி ஆலயத்தில் இருந்து கொடிச்சீலை கொண்டு வரப்பட்டு 12.15 மணியளவில் கொடியேற்றம் நடைபெறும்.
எதிர்வரும் 31ஆம் தேதி கண்ணகி அம்பாள் ஆலயத்தில் இருந்து பாற்குடபவனி இடம் பெறும்.
கும்பாபிஷேகத்தின் பின் சுமுகமான நிலையில் இடம் பெறும் திருவிழா என்பதால் சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்துள்ளதாக ஆலய பரிபாலன சபை செயலாளர் அ.குமரநாதன்( ஆசிரியர்) தெரிவித்தார்.
அண்மையில் இவ் ஆலயத் தலைவர் இ.தங்கராசா( ஓய்வு நிலை அதிபர்) இறைபதமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment