நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தியாகத்தை நினைவு கூரும் இத்தியாகப் பெருநாளில் இலங்கை திருநாடு எதிர்கொண்டுள்ள பிச்சினைகள் நீங்கி, வறுமை ஒழிந்து ஒட்டுமொத்த பிரச்சினைகளும் நீங்க இறைவனிடம் பிரார்த்தியுங்கள் என்று மெளலவி சாபித் (ஷரயி,ரியாதி) புனித ஹஜ்ஜுப் பெருநாள் நபிவழித் திடல் தொழுகையின் பின்னர் இடம்பெற்ற குத்பா பேருரையில் தெரிவித்தார்.
புனித ஹஜ்ஜுப் பெருநாள் நபிவழித் திடல் தொழுகை கல்முனையில் நடைபெற்றது. பெருநாள் தொழுகையையும் குத்பா பிரசங்கத்தையும் மெளலவி சாபித் (ஷரயி,ரியாதி) அவர்கள் நிகழ்த்தினார்.
இங்கு கலந்து கொண்ட பிரதேசவாசிகள் முன்னிலையில் அவர் தொடர்ந்தும் உரையாற்றும் போது,இன்று எமது நாட்டினுடைய பொருளாதாரம் சரிந்திருக்கிற நிலையில் உண்பதற்கு வழியில்லாமல் எத்தனையோ ஏழைகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இவர்களுக்கு தனவந்தர்கள் அதிகம் அதிகம் உதவுங்கள். விசேடமாக உழ்ஹிய்யா என்கிற வணக்கத்தை நிறைவேற்றி அதனை ஏழை எளியவர்களுக்கு வழங்குங்கள். மிக நீண்ட நாட்களாக உண்ண உணவின்றி, ஒரு வேளை சாப்பாட்டையே சாப்பிட வழியின்றி வாடுகின்ற மக்களுக்கு எங்கள் உதவிகள் போய் சேரட்டும்.
குடும்பங்களோடு ஒற்றுமையாக இந்த பெருநாளை கொண்டாடுங்கள். எமது நாட்டிற்காகவும் நாட்டு மக்களுக்காகவும் பிரார்த்தியுங்கள்.
நேற்றைய தினம் ஹாஜிகள் அறபாவில் தரித்திருக்கும் தினத்தில் ஏனையவர்கள் நாம் அறபா நோன்பை நோற்றோம். 10 வது பிறையில் இன்று பெருநாள் கொண்டாடுகிறோம். இது நபிகள் நாயகம் காட்டித் தந்த சிறப்பான நபி வழியாகும் என்றும் உரையாற்றினார்.

0 comments :
Post a Comment