கல்முனைக் குடி 2ஆம் குறிச்சியில் வீடு ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் குறித்த வீட்டில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளன.
கல்முனை செய்லான் வீதியில் அமைந்துள்ள ஆதம்பாவா மீராசாஹிப் என்பவரது வீட்டிலேயே இன்று (07) பிற்பகல் 3.30 மணியளவில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. தீ விபத்து ஏற்படும் போது வீட்டில் எவரும் இருக்கவில்லை என அருகிலிருந்தவர்கள் தெரிவித்தனர்.
புதிதாக கட்டட வேலைகள் நடைபெற்ற வீட்டில் மாடுகள் உண்பதற்காக சேகரித்து வைக்கப்பட்டிருந்த வைக்கோலில் தீ பரவியதால் வீட்டில் வைக்கப்பட்டிருந்த மரத் தளபாடங்கள் உட்பட பெறுமதியான சொத்துக்கள் எரிந்து நாசமாகியுள்ளது.
ஸ்தலத்திற்கு வருகைதந்த கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்படுத்தினார்கள். எனினும் தீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.