தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 912 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் கடந்த 26 ஆம் திகதி அதிகாலை 4.00 மணி முதல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, இதுவரையிலான காலப்பகுதியினுள்ளேயே இக்கைதுகள் இடம்பெற்றுள்ளன.
இதற்கமைய, (29) அதிகாலை 4.00 மணி முதல், இரவு 10.00 மணி வரையிலான காலப்பகுதியினுள் 132 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
முகக் கவசங்களை அணியாமை, சமூக இடைவெளியைப் பேணாமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இச்சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம், குடிமக்கள் வாழ்க்கை மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மீட்டெடுப்பதற்காக, கடந்த மே 26 ஆம் திகதி அதிகாலை 4.00 மணி முதல், தளர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.