உலகளாவிய ரீதியில் மிக வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக ஒட்டுமொத்த இலங்கை மக்களும் பாரிய கஷ்டங்களை எதிர்கொண்டுள்ள நிலையில் அன்றாட வருமானங்களை எதிர்பார்த்திருக்கும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதனடிப்படையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவின் மாவடிச்சேனை ஜிப்ரி சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் மாவடிச்சேனை கிராமத்தில் வாழும் 1100 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வீடு வீடாக சென்று நேற்று வெள்ளிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
மாவடிச்சேனை ஜிப்ரி சனசமூக நிலையத்தின் தலைவர் எம்.ஏ.அல்பத்தா தலைமையில் இடம்பெற்ற நிவாரண பணியில் கிராம சேவை அதிகாரி திருமதி.பாத்திமா ஜெஸ்ரின், சமுர்த்தி உத்தியோகத்தர் எம்.இஸ்மயில், பொதுச்சுகாதார பரிசோதகர் ஏ.ஆர்.ஹக்கீம், கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் ஏ.எல்.ஜௌபர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், மாதர் அபிவிருத்திச் சங்க தலைவி ஏ.எல்.லத்திபா, மாவடிச்சேனை அல்-இக்றாஹ் விளையாட்டுக் கழக தலைவர் எம்.லத்தீப் உட்பட இளைஞர்கள் சகதிம் கலந்து கொண்டு உதவிகளை வழங்கி வைத்தனர்.
மாவடிச்சேனை பிரதேச தனவந்தர்கள் வழங்கிய நிதிப் பங்களிப்பின் மூலம் கிராம அபிவிருத்திச் சங்கம், மாதர் அபிவிருத்திச் சங்கம், மாவடிச்சேனை ஜிப்ரி சனசமூக நிலையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் கொரோணா பாதிப்பில் வருமானம் இழந்த மற்றும் ரமழான் நோன்பினை முன்னிட்டும் மாவடிச்சேனை கிராமத்தில் வாழும் 1100 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.
மாவடிச்சேனை கிராமத்தில் வாழும் அதிக குடும்பங்கள் தினக்கூலிகளாகக் காணப்படுவதுவதுடன், வருமான இழப்பு காரணமாக அன்றாட உணவுத் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதிலும் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.