இ.தொ.கா விமர்சிக்க வேண்டாம் சக்திவேல்


தலவாக்கலை பி.கேதீஸ்-
லங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானை விமர்ச்சிக்க எவருக்கும் தகுதியில்லை. மக்களோடு மக்களாக களத்தில் நின்று மக்களின் தேவைகளை அறிந்து செயற்படுபவர் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஏ. பி.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

நேற்று முன் தினம் ( 2.4.2020 ) வியாழக்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற சர்வ கட்சி கூட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தோட்ட தொழிலாளர்களுக்கு முறையாக நிவாரணங்கள் வழங்கப்படவில்லை என கேள்வி எழுப்பியிருந்தார். இக்கூட்டத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக யார் கலந்து கொள்ள வேண்டும். என்பதை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானிக்குமே தவிர அதை மனோ கணேசன் தீர்மானிக்க கூடியவர் அல்ல. கால்பந்து அரசாங்கம் என்பது ஒரு தற்காலிக அரசாங்கமாகும். இதனூடாக பல திட்டங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த இயலாது தீர்க்கமான முடிவுகளையும் மேற்கொள்ளவும் முடியாது.

கொவிட் 19 கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடே பொருளாதார வீழ்ச்சியடைந்து காணப்படுகின்றது. உலக நாடுகளே கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை எவ்வாறு மீட்டெடுப்பது என்று பல்வேறு கோணங்களில் சிந்தித்து வருகின்றார்கள். ஆனால் இங்கு சிலர் இதை வைத்து கொண்டு அரசியல் இலாபம் தேட முனைகின்றமை வேதனை அளிக்கின்றது. நீங்களும் மக்கள் பிரதிநிதிதான் வாருங்கள் ஒன்றிணைந்து செயற்படுங்கள் மலையக மக்களை கொரோனோ வைரஸ் தொற்று நெருங்காமல் இருக்க பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துங்கள். அவர்களுக்கு பல்வேறு விதத்தில் உதவ முன்வாருங்கள் இதனை நாங்களும் வரவேற்கின்றோம். இன்று இந்த வைரஸ் தொற்றிலிருந்து ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய உயிரை பாதுகாத்து கொள்ள பாதுகாப்பை தேடி அலைந்துக்கொண்டிருக்கின்றான். இங்கு அரசியல் பேச நேரமில்லை. ஒரு உயிரை பாதுகாத்து கொள்வதற்கே ஆலோசனைகள் தேவை.

மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கின்றார்கள் அவர்களை தூண்டிவிடாதீர்கள். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் எமது மக்கள் மத்தியிலிருந்து அவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளுக்கு உடனடியான தீர்வுகளை மேற்கொண்டு வருகிறார். கொழும்பிலே எமது எத்தனையோ இளைஞர் யுவதிகள் பசி,பட்டினியோடு தனி அறைகளிலே முடங்கி கிடக்கின்றார்கள். கொழும்பிலே எத்தனையோ இடங்கள் சீல் செய்யப்பட்டு வருகின்றன. எமது இளைஞர் யுவதிகளை அவர்களின் சொந்த ஊர்களுக்கு கொண்டுவரும் பாரிய முயற்சியில் தொடர்ச்சியான கலந்துரையாடல்களையும் அதற்கான முன்னெடுப்புக்களை அமைச்சர் மேற்கொண்டு வருகின்றார்.

எல்லா சமூகங்களையும் பாதுகாக்க வேண்டிய கடமையில் அரசாங்கம் முன்னிற்று செயற்பட்டு வருகின்றது. பெருந்தோட்டங்களில் வாழும் மக்களை நான்கு பிரிவினர்களாக பிரிக்கப்பட்டு செயல்படுத்தி வருகின்றார்கள். தொழிலாளர்கள், ஓய்வூதிம் பெறுப வர்கள், தினக்கூலிகள், சமுர்த்தி பயனாளிகள் ஆகியோர் என அடையாளம் கண்டு அவர்களுக்கான நிவாரணத்தையும் உதவித்திட்டங்களையும் வழங்க அரசாங்கத்தின் ஊடாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார். சமுர்த்தி பயனாளிகளுக்கு சமுர்த்தி கொடுப்பனவுக்கு அப்பால் 10 ஆயிரம் ரூபா வட்டியில்லாக் கடனும் பெற்றுக் கொடுக்க அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகின்றார். இதேவேளை, ஜனாதிபதி மற்றும் பிரதமரின் 5000ம் ரூபா சலுகை பொதியை வழங்குவதற்காக அரசாங்க அதிபரின் கீழ் பிரதேச மட்டத்தில் விசேட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் தோட்டப்புற ஓய்வூதிய காரர்களும், தினக் கூலிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.

இன்றைய அரசாங்கம் பிரதேச செயலாளர்களுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்கியுள்ளது. அரசாங்க அதிபரின் கீழ் அந்த அந்த கிராம சேவகர் பிரிவுக்கு பொறுப்பான கிராக சேவகர், சமுர்த்தி அதிகாரிகள், பிரதேச அபிவிருத்தி அதிகாரி, உட்பட துறைசார் பலர் உள்ளடங்குவர். இந்த குழுக்கள் ஊடாக அரச நிவாரணத்தை வழங்குவதற்கான பெயர் பட்டியலை தயாரிக்கும் பணிகள் தற்பொழுது இடம்பெற்று வருகின்றன. ஆகவே, இந்தத் தருணத்தில் குறைகளை கூறுவதை விடுத்து தங்களால் முடிந்த பணிகளை செய்வதே பொறுத்தமானதாக அமையும். இக்கட்டமான சூழலை எமது மலையக மக்கள் எதிர்க்கொண்டுள்ள தருணத்தில் அவர்களுக்கு உதவிகளை செய்யவிடினும், குறைக்கூறவது நாகரீகமற்றது என்பதை முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் புரிந்துகொள்ள வேண்டும்.

முழு நாடே ஸ்தம்பித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் ஒருவரை ஒருவர் குறை கூறுவது ஆரோக்கியமான செயலல்ல. அட்டன் டிக்கோயா நகர சபைக்குட்பட்ட தரவளை பிரதேசம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இங்குள்ள மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் நேற்று முன் தினம் (2.4.2020) வியாழக்கிழமை நடைபெற்ற விசேட சந்திப்புகள் அட்டனில் அதிகாரிகளுடன் இடம்பெற்றதால் சர்வக் கட்சிக் கூட்டத்தில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது என்றார்.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -