முன்னாள் அமைச்சரும் ஸ்ரீல.சு.க. பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, அம்பாறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த முஸ்லிம், தமிழ் அமைப்பாளர்களையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும், (12) சனிக்கிழமை சந்தித்தார்.
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீல.பொ.பெ. ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ்வுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில், ஸ்ரீல.சு.க. யின் மத்திய செயற்குழு எடுத்துள்ள தீர்மானம் குறித்து இங்கு அமைப்பாளர்களுக்கு மத்தியில் அறிவுறுத்தப்பட்டது. இதற்கு அங்கு கூடியிருந்த அனைவரும், குறித்த தீர்மானம் தொடர்பில் தமது சம்மதத்தைத் தெரிவித்தனர்.
இதன்போது, அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களின் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட காணிகளை விடுவிக்கக் கோரும் மக்களுடனான கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றது.
காணிகளை விடுவிக்கக் கோரும் மக்களின் பிரச்சினைகள் ஆராயப்பட்டு, இன்னும் ஆறு மாத காலத்திற்குள் அதற்கான தகுந்த தீர்வு பெற்றுத் தரப்படும் என்று, இதன்போது பைஸர் முஸ்தபா அவர்களிடம் தெரிவித்தார்.
தேர்தல் காலத்தில், மக்களின் ஆர்ப்பாட்டம் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த மக்களின் பிரச்சினைகளை அறிய கொழும்பிலிருந்து பைஸர் முஸ்தபா சென்று, அவர்களுடன் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இக்கலந்துரையாடலின்போது, அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீயானி, இறக்காமம் பிரதேச சபைத் தவிசாளர் கலீலுர் ரஹ்மான், குருநாகல் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் அப்துல் சத்தார் உள்ளிட்ட மேலும் பல பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.