அறபா தினம் என்பது அந்தந்த பிரதேசங்களில் அல்லது நாடுகளில் பிறைகண்டதற்கேற்ப பெருநாள் தினமும் அதற்கு முந்தியநாள் அறபா தினமுமாகும்; என்பதுதான் இமாம்கள், பெரும் உலமாக்கள் எல்லாம் பல நூற்றாண்டுகளாக குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் முன்வைத்த கருத்துக்களைக்கொண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்ததாகும்.
சம காலத்தில் சமூகத்தை வழிகெடுக்கப் புறப்பட்ட கூட்டம் குர்ஆன், ஹதீஸிற்கு பல நூறாண்டுகளாக கொடுக்கப்பட்டுவந்த வியாக்கியானங்களையெல்லாம் உதறித்தள்ளிவிட்டு தமது சொந்த வியாக்கியானங்களை வழங்குவதும் அவர்களுக்குப் பின்னால் கூட்டம் கூட்டமாக மக்கள் வழிகெட்டுப்போவதும் உலக முடிவில் குர்ஆன் பரதேசியாகப் போய்ச்சேரும்; என்பதற்கான அடையாளமோ என்னவோ! ஏனெனில் எவனொருவன் குர்ஆன், ஹதீஸின் உண்மையான பொருளை உதறித்தள்ளி அவன் மனம்போன போக்கில் வியாக்கியானம்கொடுக்கிறானோ அவன் எவ்வாறு குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றியவனாவான்?
இந்த வழிகேட்டின் ஓர் அங்கமாக மக்காவில் அறபா தினத்தன்றுதான் உலகம் பூராகவும் அறபா என்றும் சவூதிப்பிறை, சர்வதேசப்பிறை என்றெல்லாம் மக்களை வழிகெடுப்பதை வழக்கமாக்கிவிட்டார்கள்.
சரி, 1400 வருடமாக இமாம்களும் உலமாக்களும் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் சொல்லி வந்ததெல்லாம் பிழை. இவ்வளவு காலமும் முஸ்லிம்கள் அவர்களைப் பின்பற்றி செய்ததெல்லாம் பிழை. இவர்கள்தான் அறிவாளிகள். இவர்கள் சொல்வதுதான் சரி என வைத்துக்கொள்வோம்.
இந்த அறிவாளிகளிடம் கேட்க விரும்புவது:
இஸ்லாம் வந்து பல நூறு ஆண்டுகள் தபால்சேவைகூட இருக்கவில்லை. நவீன தொடர்பு வசதி இருக்கவில்லை. ஏதாவது செய்தி ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு கொண்டுசெல்லப்பட வேண்டும்; என்றால் பல நாட்கள், வாரங்கள் அல்லது மாதங்கள் பயணம் செய்யவேண்டும் . சில நேரங்களில் பறவைகள் பாவிக்கப்பட்டிருக்கின்றன.
பிறை கண்டதும் நோன்பை விட்டு பெருநாள் கொண்டாட வேண்டும். சவூதிப் பிறை அல்லது சர்வதேசப்பிறையில் பெருநாள் கொண்டாடுவதுதான் மார்க்கமென்றால் பிறை செய்தியை உலகமெல்லாம் கொண்டுபோய் சேர்க்க எவ்வளவு காலம் தேவைப்படும். அந்நிலையில் எவ்வாறு சவூதி அல்லது சர்வதேச பிறையை வைத்து பெருநாள் கொண்டாடினார்கள் என்பதற்கு இவர்களின் பதில் என்ன?
அல்லது 1400 வருடமாக உலக முஸ்லிம்களெல்லாம் தவறான தினத்தில் பெருநாள் அல்லது அறபா தினம் கொண்டாடினார்கள். இப்பொழுது நவீன கருவிகள் வந்தபின்தான் சரியான தினத்தில் மக்கா தினத்தன்று சரியாக உலக நாடுகளிலும் அறபா அல்லது பெருநாள் கொண்டாடுகிறார்களா?
ஒரு சராசரி மனிதனின் பகுத்தறிவுக்கு புரியக்கூடிய இவ்வாறான சிறிய விசயங்களைக்கூட புரிந்தகொள்ள முடியாத இந்த வழிகெட்ட சிலரை நம்பி வழிகெட்டுப்போகும் சகோதரர்களே! உங்களாலுமா சிந்திக்கமுடியாமல் இருக்கிறது?
தயவுசெய்து சிந்தியுங்கள்! வழிகேட்டைத் தவிருங்கள். இந்த வழிகெட்டவர்களால்தான் இன்று முஸ்லிம்கள் இனவாதிகளால் வேட்டையாடப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது; என்பதையும் கவனத்திற்கொள்ளுங்கள்.