சம்பவம் ஒன்றில் காயமடைந்த தமது மகனை வைத்தியசாலையில் அனுமதித்து, அவருடன் பெற்றோர் தங்கியிருந்த நேரத்தைப் பயன்படுத்தி, பட்டப்பகலில் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த மே மாதம் 25 ஆம் திகதி கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் விளையாட்டு மைதான ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கால்பந்து கோல் போஸ்ட் ஒன்று இடைவேளை நேரத்தில் சாய்ந்து விழுந்ததால் தரம் 09 இல் கல்வி கற்கின்ற ஊடகவியலாளர் அஸ்லம் மௌலானாவின் மூத்த புதல்வர் ஆஷிப் மௌலானா என்பவரது வலது காலில் முறிவு ஏற்பட்டு, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார்.
மறுநாள் 26 ஆம் திகதியன்று ஊடகவியலாளர் அஸ்லம் மௌலானாவும் அவரது மனைவியும் வைத்தியசாலையில் தங்கியிருந்து தமது மகனுக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கான முன்னாயத்தங்களில் ஈடுபட்டிருந்தனர். இதனால் வீட்டில் எவருமில்லாத நிலையில் வீடு பூட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் இரவு 7.00 மணியளவில் சாய்ந்தமருது அல்ஹிலால் வீதி, ஜின்னா லேனில் அமைந்துள்ள தனது வீட்டுக்குச் சென்றபோது, வீட்டில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றிருந்ததை ஊடகவியலாளர் அஸ்லம் மௌலானா அவதானித்துள்ளார்.
இதன்போது வீட்டின் பின்பக்கமாக அமைந்துள்ள குடியிருப்பாளர்கள் அற்ற வீடு - வளவு வழியாக இவரது வீட்டின் பின்பக்கமாகவுள்ள சமையலறைக் கதவுகளை உடைத்து உள்நுழைந்துள்ள திருடன் படுக்கையறை மேசையில் இருந்த லெப் டொப் ஒன்றையும் படுக்கையறையில் உள்ள அலுமாரியை உடைத்து 75 ஆயிரம் ரூபா பணத்தையும் பெண்ட்ரைவ் இரண்டையும் சமையலறையில் இருந்த கேஸ் சிலிண்டர் ஒன்றையும் திருடிச் சென்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டமைக்கு அமைவாக பொலிஸார் பல தடவைகள் சம்பவ இடத்திற்கு சென்று, அப்பகுதியிலுள்ள CCTV காட்சிகளை பரீட்சித்து வருகின்ற அதேவேளை தற்போது குற்றப்புலனாய்வுப் பிரிவின் விஷேட குழுவொன்றும் களமிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கட்டுகிறது.

0 comments :
Post a Comment