மலையக மக்கள் இரண்டாம்தர குடிகள் இல்லை. குத்தகை பத்திரம் அல்லாது முழுமையான காணி உறுதியே வழங்குகின்றோம்


காணி அமைச்சர் கயந்த கருணாதிலக்க
ந்திய வம்சாவளியினரான தமிழ் மக்கள் குடியுரிமை இல்லாதிருந்த நிலையில் அவர்களுக்கு அது மீளவும் கிடைக்க செய்ய ஐக்கிய தேசிய கட்சியே நடவடிக்கை எடுத்தது. அவர்களுக்கு குடியுரிமை கிடைத்த போதும் அவர்களுக்கென்று சொந்தமாக காணித் துண்டு ஒன்று இருக்கவில்லை. 

ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தில் அவர்களுக்கு தனி வீடு அமைத்துக்கொடுக்கப்படுவதுடன் அதற்காக ஏழு பேரச்சஸ் காணியும் அதற்கான முழுமையான காணி உறுதியும் வழங்கிவருகிறோம். அவர்களுக்கு குத்தகை பத்திர அடிப்படையில் உரிமைப் பத்திரங்கள் வழங்குவதற்கு சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தை நாம் திரும்ப பெறச்செய்துள்ளோம். இந்திய வம்சாவளி மலையக மக்கள் இரண்டாம்தர குடிகள் இல்லை. அவர்களுக்கு காணி உரிமை கிடைத்த நாளே அவர்கள் உண்மையான இலங்கை பிரஜையான நாளாகும் என காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் அமைக்கப்படும் இந்திய வீட்டுத்திட்டத்துக்கான ஆரம்ப நிகழ்வு அண்மையில் காலி தலகஸ்வல தோட்டத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தாணிகரகத்தின் கவுன்சிலரும் வீடமைப்புத்திட்ட பொறுப்பதிகாரியுமான மஞ்சுநாத் பிரதமஅதியாகவும், காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பியசேன கமகே, நுவரலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர். எம்.திலகராஜ் ஆகியோர் சிறப்பு அதிதியாகவும் கலந்துகொண்ட கூட்டத்திற்கு தலைமை வகித்து உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 
இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பான பெருந்தோட்டத்துறையில் தொழிலாளர்களாக பணியாற்றும் மக்களது வாழ்வாதாரம் சிறப்பானதாக இருக்கவில்லை. காலத்திற்கு காலம் அவர்களுக்கு கல்வி முதலான வாய்ப்புகள் தேசிய ரீதியாக வழங்கப்பட்டபொதும் இன்னும் ஆற்றவேண்டிய பணிகள் பல உள்ளன. அவர்களை இலவச கல்வி முறைமைக்குள் உள்வாங்கியதன் காரணமாகவே இன்று திகாம்பரம், திலகராஜ் போன்றவர்கள் தோட்டத்தில் பிறந்துவளரந்து, தோட்டப்பாடசாலைகளில் கல்வி கற்று இன்று அமைச்சரவையிலும் பாராளுமன்றத்திலும் திறமையாக செயல்படுகின்றனர். திலக்ராஜ் மோட்டப்பாடசாலையில் ஆரம்பித்து கொழும்பு பல்கலைக்கழகத்தில் கற்று இன்று பாராளுமன்றத்திலும் உள்ளார். அவர் மூன்று மொழிகளிலும் சரளமாக பேசும் ஆற்றல் கொண்டவர். தோட்டப்பகுதி குழந்தைகள் இளைஞர், யுவதிகளுக்கு இவர்கள் சிறந்த முன்னுதாரணமாகும். அமைச்சர் திகாம்பரம் தனது மக்களுக்காக அமைச்சரவையில் எந்த சந்தர்ப்பத்திலும் விட்டுக்கொடுக்காது செயற்படுபவர். அண்மையில் தோட்டத் தொழிலாளர் மக்களுக்கு குத்தகை அடிப்படையில் காணி உரித்து வழங்க அமைச்சரவைக்கு பத்திரம் சமர்ப்பிக்கப்பட்போது அவர் அதனை வன்மையாக மறுத்தார்.நானும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தேன். ஏற்கனவே எங்களது இரண்டு அமைச்சுகளும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சுடன் இணைந்து முழுமையான காணி உறுதி பத்திரம் வழங்கும் அனுமதியைப் பெற்று நடைமுறைப்படுத்தி வருகிறோம், இந்த நிலையில் அதற்கு மாறான முறைகள் அவசியமில்லை. அவர்கள் இந்த நாட்டின் இரண்டாம்தர பிரஜைகள் இல்லை. அவர்களுக்கு பிரஜாவுரிமை மறுக்கப்பட்டு இருந்தது. அதனை ஐக்கிய தேசிய கட்சியாக நாங்கள் பெற்றுக் கொடுத்தோம்.ஆனாலும் அவர்களுக்கென்று ஒரு துண்டு நிலம் சொந்தமாக கிடைக்கும் நாளே அவர்கள் உண்மையாக இந்த நாட்டின் பிரஜைகளாவர். அந்த அடிப்படையிலேயே அவர்களுக்கு முழுமையான காணி உறுதியை வழங்க ஏற்பாடு செய்து நடைமுறைப்படுத்தியும் வருகிறோம்.
நுவரெலியா மாவட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டங்களை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வுகளுக்கு நான் பல சந்தர்ப்பங்களில் சென்று உரையாற்றியுள்ளேன்.இந்த முழுமையான காணி உறுதி குறித்தும் அவர்களின் உண்மையான பிரஜை அந்தஸ்தையும் குறித்து எனது கருத்தை நான் சொல்லும்போது அவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்வதனை அவதானித்து இருக்கிறேன்.அவ்வாறு செல்லும் போது உடன் வந்த இந்திய உயர்ஸ்தாணிகரிடம் காலி மாவட்டத்தில் உள்ள பெருந்தோட்ட மக்களுக்கும் வீடுகளை தருமாறு வேண்டுகோள் விடுத்தேன். அதன் அடிப்படையிலேயே இந்த ஐம்பது வீடுகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார். மேலும் காலி மாவட்டத்துக்கு 150 வீடுகளை பெற்றுக் கொடுக்கவும் உறுதி அளித்துள்ளார். அதற்காக இந்திய அரசாங்கத்துக்கும் திட்டத்தை நடைமுறைபடுத்தும் அமைச்சர் திகாம்பரத்துக்கும் எமது நன்றிகளை தெரிவிக்கிறோம்.இந்திய எமது பக்கத்து நாடு மட்டுமல்ல நிரந்தர நட்பு நாடாகும் என்றும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -