போஷாக்கான உணவுகளை உண்ணக் கொடுத்து மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்பி வையுங்கள் அவர்களது கணிதப்பாட அடைவு மட்டம் அதிகரிக்கும் என்று மட்டக்களப்பு மத்தி கல்வி வலய கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா தெரிவித்தார்.
வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் பேசுகையில்,
பெற்றோர்களாகிய நீங்கள் அதிகாலையிலே எழும்பி பிள்ளைகளுக்காக சமைத்து அவர்களுக்கு உணவு கொடுத்து, அன்பாக ஊட்டி அனுப்பி வையுங்கள் அவர்கள் கணிதத்திலும் கல்வியிலும் பிரகாசிப்பார்கள்.
அதைவிட்டுவிட்டு கடைகளில் விற்கப்படும் பராட்டாவையும், தோசையையும் வாங்கிக் கொடுத்து பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புவதினால் பிள்ளைகள் கணிதம் விளங்காதவர்களாக சிறந்த பெறுபேறுகளை எடுக்க முடியாதவர்களாக மாறுகின்றார்கள். அதனை பெற்றோர்களாகிய நீங்கள் மாற்றுங்கள்.
நீங்கள் எல்லோரும் சேர்ந்து பிள்ளைகளுடைய கல்வி வளர்ச்சியில் அவர்களுக்கு தேவையான போஷாக்கான உணவுகளை வழங்குவதில் கவனமாக இருங்கள். காலை உணவை பிள்ளைகளுக்கு அதிகாலையிலே கொடுக்கப் பழக்குங்கள். பிள்ளைகள் உரிய நேரத்திற்கு சாப்பிடாமல் நீண்ட நேரத்திற்குப் பின்னர்தான் சாப்பிடுகின்றார்கள் என்று நீங்கள் சொல்லும் சாட்டுப்போக்கை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது.
அதனைப் பழக்கத்திலே கொண்டு வாருங்கள் நீங்கள் சற்று ஆரம்பத்திலே விழித்தெழுங்கள் பிள்ளைகளுக்காக சமையுங்கள், ருசியாகச் சமையுங்கள் நன்றாக எண்ணைவிட்டு வருத்துத் துவட்டிக் கொடுங்கள். வயது போனவர்களுக்குத்தான் எண்ணை உணவுகளை குறைக்க வேண்டுமே தவிர இந்த சிறார்களுக்கு குறைக்க வேண்டிய அவசியமில்லை.
எனவே பிள்ளைகள் ருசியாக சாப்பிடக் கூடியளவுக்கு காலையிலே சமைத்து பிள்ளைகளுக்கு சந்தோஷமாகக் கொடுத்து, சந்தோஷமாக போய் வாருங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்து பிள்ளைகளுடைய கல்விக்காக நீங்கள் எல்லாம் முயற்சி செய்யுங்கள்.
எங்களுடைய பிள்ளைகளின் தேவைக்காக, பிள்ளைகளுடைய போஷாக்கை வளர்ப்பதற்காக எழுபது ரூபாவுக்கு அல்லது அதற்கு மேலாக புகைத்தலுக்காக செலவு செய்கின்ற பணத்தை எடுத்து ஈரலை வாங்கிச் சாப்பிடலாம் நல்ல மீன்களை வாங்கிச் சாப்பிடலாம் நல்ல தரமான விட்டமின் உணவுகளை வாங்கிச் சாப்பிடலாம் அதையெல்லாம் விட்டுவிட்டு நாங்கள் நோயாளிகளாக மாறி பிள்ளைகளையும் நோயாளிகளாக மாற்றுகின்றோம். ஒரு பிள்ளைக்கு கணிதம் விளங்கவில்லை என்றால் காலையிலே போஷாக்கான உணவுகளை கொடுத்து அனுப்பவில்லை என்றுதான் அர்த்தம் என்றார்.