கல்முனை கம நல சேவைகள் மத்திய நிலையத்தின் பெரும்போக உத்தியோகத்தரான ஏ. எம். ஹனிபா என்பவரால் கல்முனை பொலிஸ் நிலையத்தில் வைத்து நீ என்னடா நாயே என்று ஆபாச வார்த்தையால் திட்டப்பட்டதாக சாய்ந்தமருதை சேர்ந்த ஓய்வு நிலை ஆசிரியரான எம். சி. ஆதம்பாவா கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (28)புதன்கிழமை வழக்கு தாக்கல் செய்தார்.
இருவரும் பொலிஸ் விசாரணைக்காக சென்றிருந்தனர் என்றும் இவரால் பொலிஸ் உத்தியோகத்தருக்கு வாக்குமூலம் வழங்கப்பட்டுக்கொண்டு இருந்தபோது பொலிஸார் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் வைத்து எதிரி மேற்படி ஆபாச வார்த்தையால் இவரை ஏசி, அச்சுறுத்தி, மன குலைவை ஏற்படுத்தி, பொது இடத்தில் சண்டையை ஏற்படுத்தினார் என்றும் முறைப்பாட்டாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
இவ்வழக்கு கல்முனை நீதிவான் ஐ. என். ரிஸ்பான் முன்னிலையில் அழைக்கப்பட்டபோது முறைப்பாட்டாளரை ஆதரித்து சட்டத்தரணி ஏ. முஹமட் பாருக் ஆஜரானார்.
நாய் என்று திட்டுவது ஆபாச வார்த்தையின் பாற்படுமா? என்று நீதிவான் இவரை வினவினார். நாய் என்று திட்டுவது ஆபாச வார்த்தைதான் என்று சட்டத்தரணி பதில் சொன்னார்.
இந்நிலையில் இவ்வழக்கை முறைப்பாட்டாளரின் சட்டத்தரணி ஆதரிப்பதற்காக அடுத்த மாதம் 07 ஆம் திகதியை நீதிவான் குறித்து கொடுத்தார்.