ரயில்களில், வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மற்றும் யாசகம் பெறுவோரைக் கைது செய்வது தொடர்பிலான நடைமுறை, கடந்த வாரம் (21) முதல் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, ரயில்வேத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிவில் உடையில் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, திணைக்களத்தின் பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
ரயில்வேத் திணைக்கள சட்ட திட்டங்களின் பிரகாரம், ரயில்களில் யாசகம் பெறுவதற்கும், வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளபோதிலும், சிலர் இந்த விதிமுறைகளை மீறி, தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாக, ரயில்வேத் திணைக்கள பாதுகாப்பு அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடைமுறையின் கீழ், பார்வையற்றவர்கள் போன்று பயணிகளை ஏமாற்றி, யாசகம் பெறுபவர்களைக் கைது செய்ய முடிந்துள்ளதாகவும், ரயில் பயணிகள் இது தொடர்பில் அவதானத்துடனும், புத்தி சாதுர்யத்துடனும் செயற்பட வேண்டும் என்றும், ரயில்வேத் திணைக்களத்தின் பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்