அமரர். சௌமிய மூர்த்தி தொண்டமான் வழியில் வந்த நான் மலையக மக்களின் எதிர்காலத்தை பாதுகாக்க விரைவில் அரசியலுக்கு வருவேன் என ஆறுமுகன் தொண்டமானின் புதல்வன் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி பொது செயலாளராக தெரிவு செய்யப் பெற்ற அவர் கொட்டகலையில் இடம்பெற்ற மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 105வது பிறந்த தின விழாவில் உரையாற்றிய அவர் தனது கன்னியுரையில் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
சௌமிய மூர்த்தி தொண்டமான் ஐயாவின் கொள்ளுபேரன் ஆகிய நான் அவரை பற்றியும் அவர் மலையக மக்களுக்கு ஆற்றிய சேவைகளை பற்றியும் புத்தகத்தின் ஊடாக கற்றுள்ளதோடு, எனது வீட்டார்களும் எனக்கு தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில் மலையக மக்களுடைய பிரஜாஉரிமை தொடர்பில் பேசும் போது, ஒரு காலத்தில் பிரஜா உரிமை என்றால் என்ன என்ற கேள்வியும் எழுப்பியுள்ளேன். ஓட்டு போடுவதுதான் பிரஜா உரிமை என நினைத்ததுன்று.
மனிதன் தலைநிமிர்ந்து வாழ்வதற்கான ஒரு உரிமை பிரஜா உரிமையென பின் அறிந்தேன். இன்று மலையக மக்கள் தலைநிமிர்ந்து வாழ்வதற்கான பிரஜா உரிமையை சௌமிய மூர்த்தி தொண்டமான் ஐயா மலையக மக்களுக்கு பெற்று கொடுத்துள்ளார்.
அதனால் நமது சமூகம் தலைநிமிர்ந்து மானத்தோடு வாழ்கின்றனர் என்பதை உணர்ந்தேன் என தெரிவித்த அவர், நமது சமூகம் எவரிடமும் கைக்கட்டி வாழக்கூடாது. கல்விகற்ற சமூகமாக சுயமாக தொழில் செய்து வாழவேண்டும் என்பதை கருத்தில் கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்தார்.
இன்று இளைஞனாக காங்கிரஸின் கொள்கை மற்றும் அதன் மக்கள் சேவை அவர்களின் நோக்கம் மற்றும் மக்களின் முன்னேற்றத்தில் காங்கிரஸின் எதிர்கால சிந்தனை ஆகியவற்றை கற்றுக்கொண்டுள்ள நான் பிரதி பொது செயலாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளேன்.
எதிர்காலத்தில் மலையக மக்களின் தேவையுணர்ந்து சேவையை முன்னெடுக்க அரசியலுக்கு வந்ததன் பின் கூடுதலாக உரையாற்றுவேன் என தனதுரையில் தெரிவித்தார்.