குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு
ஸ்தலத்திற்கு விரைந்த பிரதியமைச்சர் காதர் மஸ்தான் பொலிஸுக்கு உத்தரவு.
முல்லைத்தீவு நாயாற்றுப் பகுதியில் தமிழர்களின் மீன் வாடிகள்,படகுகள், இயந்திரங்கள் அனைத்தும் தீயிட்டுக் கொழுத்தப்பட்டமையினால் அப் பகுதியில் சிறு பதற்றம் நிலவுகின்றது.இனம் தெரியாதோரால் வேண்டுமென்றே வைக்கப்பட்ட தீயினால் இதுவரை 8 வாடிகள்,3 படகுகள் , 2 இயந்திரங்கள், 27 வலைகள் என்பன முற்றாக தீயில் எரிந்து அழிவடைந்துள்ளன.
முல்லைத்தீவு கடலில் ஆபத்தான சுருக்கு வலையினை பாவித்தும், தடைசெய்யப்பட்டஊதா மின்னொளி பாச்சியும் மீன்பிடிப்பதை தடை செய்ய வேண்டும் என உள்ளூர் மீனவர்கள் கடந்த 10 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதனையடுத்து 12ம் திகதி மாலையில் கடற்றொழில் அமைச்சர் விஜிதமுனி சொய்ஷா நேரில் வருகை தந்து இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி வழங்கியதுடன் அதுவரை குறித்த சட்டவிரோத மீன்பிடி முறையினை தடை செய்யவும் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று திங்கட் கிழமை மாலை 6 மணியளவில் தென்னிலங்கை மீனவர்கள் இதே தடை செய்யப்பட்ட தொழில் உபகரணங்களுடன் கடலிற்கு செல்ல முயன்ற சமயம் தமிழ் மீனவர்கள் அதனை தடுத்து நிறுத்தியிருந்தனர்.
இந்த நிலையிலேயே இரவு 11 மணியளவில் தமிழ் மீனவர்களின் வாடிகள்,படகுகள், இயந்திரங்கள், வலைகள் என அனைத்தும் தீ வைத்து கொழுத்தப்பட்டுள்ளன.இதனால் பல மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடன் ஸ்தலதிற்கு விரைந்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மீள்குடியேற்றம்,புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சருமான காதர் மஸ்தான் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டு நிர்க்கதிக்குள்ளாக்கப்பட்டுள்ள மீனவர்களை சந்தித்து சம்பவங்களை கேட்டறிந்து கொண்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட இடங்களையும் பார்வையிட்டார்.
பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்ட பிரதி அமைச்சர் சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்வதுடன் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.
மேலும் தனது அமைச்சின் செயலாளரோடு தொடர்புகொண்டு பாதிக்கப்பட்ட உடமைகளின் சேத விபரங்களை திரட்டி நஷ்டஈடு வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.