அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து கெக்கிராவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கடாட்டுகம அ/ஜாயா மகா வித்தியாலயத்திற்கு சுற்று மதில் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று 2018.08.15நடைபெற்றது.
குறித்த பாடசாலையின் ஆசிரியர் ரியாஸ் அஹமட்டின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் கலந்துகொண்டதோடு விசேட அதிதிகளாக கெக்கிராவ பிரதேச சபையின் உப தலைவர் எம்.எல்.ஹிலால்தீன், கெக்கிராவ பிரதேச சபையின் எதிர்கட்சி தலைவர் ஜயரத்ன திசாநாயக்க, வலயக்கல்வி பணிப்பாளர் எஸ்.வெயகொல்ல, கோட்டக்கல்வி பணிப்பாளர் திருமதி திலினி விஜேவீர மற்றும் தேசமான்ய எ.ஆர்.எம்.தாரிக் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வுகளின் ஒரு அங்கமாக பாடசாலையின் பெளதீக வளங்களின் அபிவிருத்தி சம்மந்தமான கலந்துரையாடலும் நடைபெற்றது. இதில் அதிதிகளுடன் பாடசாலை ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் EDA, JCO, SERF ஆகிய கழகங்களின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
பாராளுமன்றம் சென்று வெறும் 3 வருடங்களே ஆகின்ற பொழுதும் காலம் காலமாக பாராளுமன்ற ஆசனங்களை சூடாக்கிக்கொண்டும் மக்களை ஏமாற்றிக்கொண்டுமிருக்கும் அனுராதபுர மாவட்ட அமைச்சர்களை விட சாதாரண பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு இன, மத, கட்சி பேதமின்றி சகல இன மக்களுக்கும் நான் செய்திருக்கும் சேவைகள் இன்று பெரும்பான்மை இன மக்களால் கூட மெச்சப்படுகின்றன.
இக்குறுகிய காலத்திற்குள் அனுராதபுர மாவட்டத்தில் 75 கிலோ மீட்டருக்கும் அதிகாமான அளவில் பாதைகளை புனர் நிர்மாணம் செய்துள்ளேன். மிகவும் பின்தங்கிய கிராமங்களில் இருக்கும் குடி நீர் பிரச்சினைக்கு அதிகளவில் முகம் கொடுக்கும் மக்களுக்கு மக்களுக்கு சுமார் 350 இற்கும் அதிகமான குடி நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்கியிருக்கின்றேன்.1948 ஆண்டு சுதந்திரத்தின் பின்னர் அனுராதபுர மாவட்டத்திலிருந்து பாராளுமன்றம் சென்ற முதல் சிறுபான்மை இனத்தை சேர்ந்த தலைவன் என்ற பெருமையை எனக்கு தந்த என் மாவட்ட மக்களுக்கு இது வரைக்கும் நான் செய்த சேவைகள் திருப்தியை ஏற்படுத்திருந்தாலும் நான் இத்தோடு ஓயப்போவதில்லை.
இந்த நல்லாட்சிக்கு இருப்பது இன்னும் சில மாதங்களே. அதற்குள்ளேயும் அதன் பின்னர் வரும் காலத்திலும் அதிகளவான செயற்திட்டங்களை செய்து முழு அனுராதபுர மாவட்டத்தையும் எழுச்சிப்பாதையில் இட்டுச்செல்வேன் என்பதனை உறுதியாக கூறிக்கொள்கிறேன். என்று தெரிவித்தார்.